பட்டாசு தயாரிப்பில் கடுமையான விதிமீறல்...சிபிஐ ஆய்வறிக்கை மிக மோசம் - சுப்ரீம் கோர்ட் கண்டனம்
: பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான முறையில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டாசு தயாரிப்பு தொடர்பாக சிபிஐ அளித்துள்ள முதற்கட்ட ஆய்வறிக்கை மோசமாக உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவி
டெல்லி: பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான முறையில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டாசு தயாரிப்பு தொடர்பாக சிபிஐ அளித்துள்ள முதற்கட்ட ஆய்வறிக்கை மோசமாக உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜை, தீபாவளி,திருக்கார்த்திகை, புத்தாண்டு கொண்டாட்ட காலங்களில் பட்டாசுகள் அதிகம் விற்பனையாகும்.

பட்டாசு தொழிலை நம்பி பல லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டு காலமாகவே பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை. காரணம் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதோடு தீபாவளி பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட காலம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டதால் பல தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லியில் மாசுக்காரணமாக பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே போல காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா, ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.என்.எஸ்.நத்கர்னி, ''நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசியிலுள்ள வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனத்தின் வெடிபொருள் கட்டுப்பாடு இணை இயக்குனரிடம் கடந்த ஆகஸ்டு 31ஆம்தேதி அளித்த கோரிக்கை மனுவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சிலரின் வேலைவாய்ப்பு என்ற போர்வையில், பிற மக்களின் வாழும் உரிமையை பறிக்க முடியாது. வேலைவாய்ப்புக்கும், வேலையின்மை மற்றும் குடிமக்களின் வாழ்வதற்கான உரிமைக்கும் இடையிலான விஷயங்களை சமமாக பார்த்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பசுமைப் பட்டாசுகளுக்கு நிபுணர்கள் குழு ஒப்புதல் அளித்தால், அதற்கு ஏற்றாற்போல உத்தரவுகளை பிறப்பிப்போம். சட்டங்கள் இருக்கின்றன. அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும் ஏதுமறிய குடிமக்களின் வாழும் உரிமை குறித்து அக்கறை கொள்ள வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ஒவ்வொரு நாளும் மத நிகழ்வுகள், அரசியல், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா சர வெடிகள் அதிக அளவில் வெடிக்கப்படுகின்றன. இது கவலை அளிக்கிறது. இதற்கு உரிய அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் , பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான முறையில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். பட்டாசு தயாரிப்பு தொடர்பாக சிபிஐ அளித்துள்ள முதற்கட்ட ஆய்வறிக்கை மோசமாக உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிபிஐ கண்டறிந்த ஆரம்ப கட்ட அறிக்கைகளை மனுதாரர், எதிர்மனுதாரர்களுக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு தயாரிக்க உதவும் பேரியம் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த தனிமம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில தனியார் நிறுவனங்கள் அதிகமாக பேரியம் தனிமத்தை பயன்படுத்துவதாக சிபிஐ அளித்துள்ள முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் தொடர்பான அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஐக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications