எல்லையில் தொடரும் பதற்றம்... தொடங்கியது 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: எல்லையில் தொடரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஒன்பதாம்கட்ட பேச்சுவார்த்தை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற மோதல் நிலைமையை மோசமாக்கியது.

அதைத்தொடர்ந்து, இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எட்டு கட்டங்களாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்தச்சூழ்நிலையில், இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒன்பதாம்கட்ட பேச்சுவார்த்தை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காகக் கூடுதல் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா லே பகுதிக்கு விரைந்துள்ளார். அவருடன் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன், இந்தோ திபத் காவல்படை தளபதி தீபம் சேத் உள்ளிட்ட சிலரும் லே பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இமயமலைப் பகுதியில் டிசம்பர் மாதம் கடும் குளிர் நிலவும் மாதங்கள். அந்த சமயங்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே செல்லும். இதனால் இரு தரப்பும் வேறுவழியின்றி இமயமலை பகுதியில் குவிக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களைக் குறைத்துள்ளனர். இது நிலைமையைச் சற்று சாந்தப்படுத்த உதவும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிர் காரணமாகச் சீனா சுமார் 10 ஆயிரம் வீரர்களை எல்லையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனர். அதேபோல இந்திய தரப்பும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீரர்களைத் திரும்பப்பெற்றுள்ளது. வரும் காலங்களில் இரு நாட்டு அரசுகளின் ஆலோசனைக்கு ஏற்ப எல்லையில் குவிக்கப்பட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications