வாயை விட்ட மேனகா காந்திக்கு சிக்கல்.. இஸ்கான் சார்பில் ரூ.100 கோடி மான நஷ்டஈடு நோட்டீஸ்
டெல்லி: உலகளவில் புகழ்பெற்ற இஸ்கான் அமைப்பு மீது பாஜக எம்பி மேனகா காந்தி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு இஸ்கான் அமைப்பு பதிலடி கொடுக்கும் வகையில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்கான் என்று அழைக்கப்படும் International Society for Krishna Consciousness அமைப்பு உலகெங்கும் பிரபலம். இந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு உலகெங்கும் கோயில்களையும் கட்டியுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் இந்துக்கள் இஸ்கான் கோயில்களுக்கே செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூட இஸ்கான் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன் என அவரே தெரிவித்துள்ளார்.
இஸ்கான் அமைப்பு: இந்த இஸ்கான் அமைப்பின் கீழ் பல நூறு கோயில்கள், பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளும் இயங்கி வருகிறது. கிருஷ்ணர் பக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட இஸ்கான் அமைப்புக்கு உலகெங்கும் பக்தர்கள் இருக்கவே செய்கிறார்கள். மாற்று மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த இஸ்கான் அமைப்பில் இணைவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இதனால் சர்வதேச அளவில் முக்கியமான அமைப்பாக இந்த இஸ்கான் இருக்கிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்கான் அமைப்பு மீது பாஜக எம்பியும் விலங்கு நல ஆர்வலருமான மேனகா காந்தி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாட்டில் இருக்கும் மிக பெரிய ஏமாற்று நிறுவனம் என இஸ்கானை குறிப்பிட்ட மேனகா காந்தி, அவர்கள் கோசாலைகளில் இருக்கும் மாடுகளை மாட்டிறைச்சிக்கு விற்பனை செய்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேனகா காந்தி: இது குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்த மேனகா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவிலேயே மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம் என்றால் அது இஸ்கான் அமைப்பு தான்.. அவர்களுக்கு அதிக நிலங்கள் உள்ளன.. கோசாலைகளை அமைத்து அவர்கள் அரசிடம் இருந்து பல சலுகைகளைப் பெறுகிறார்கள். நான் ஆந்திரப் பிரதேசம் ஆனந்த்பூரில் உள்ள இஸ்கான் நிறுவனத்திற்குச் சொந்தமான கோசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கே பால் தராத பசுக்கள் ஒன்று கூட இல்லை. மேலும், கன்றுக் குட்டிகளும் இல்லை.
அதாவது அவர்கள் பால் தரும் பசுக்களை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற பசுக்களை விற்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இஸ்கான் நிறுவனம் இறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்கிறது. பாலையே தங்களுடைய வாழ்நாள் முழுக்க நம்பி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்களைப் போல வேறு யாரும் மாடுகளை இறைச்சிக்காக அனுப்பியதில்லை" என்று சாடியிருந்தார்.
ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ்: இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பாஜக எம்பி மேனகா காந்திக்கு ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இஸ்கான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்கான் துணைத் தலைவர் ராதாரம் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்கான் அமைப்பு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த மேனகா காந்திக்கு ரூ. 100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மேனகா காந்தியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் சர்வதேச அளவில் இருக்கும் இஸ்கான் பக்தர்கள், ஆதரவாளர்கள் வேதனை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்ற மேனகா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இல்லையென்றால் மான நஷ்டஈடு வழக்கு தொடர்வோம் என்றும் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications