தமிழ்நாட்டிற்கு 11323 கோடி, உபிக்கு 34846 கோடி.. மத்திய அரசின் சிறப்பு உதவி திட்டத்தின் முழு விவரம்
டெல்லி: சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.11 ஆயிரத்து 323 கோடி வழங்கி உள்ள மத்திய அரசு, உத்தரபிரதேசத்திற்கு ரூ.34 ஆயிரத்து 846 கோடி வழங்கி உள்ளது. நாட்டிலேயே அதிகபட்ச சிறப்பு உதவி என்பது உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வழங்கி உள்ளது.அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு உதவி மத்திய அரசு வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மாநிலங்களின் மூலதன செலவிற்காக சிறப்பு உதவிகளை செய்து வருகிறது. வட்டி இல்லாமல் கடன்களை வழங்கி வருகிறது. இப்படி வழங்கப்படும் இந்த கடன் தொகையை மாநிலங்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து திரும்ப செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த 2020-21-ம் ஆண்டு முதல் 2024- 25-ம் ஆண்டின் கடந்த ஜூலை 23-ம் தேதி வரை மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் கோடி அளவுக்கு வழங்கி உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, சிறப்பு உதவி திட்டத்தில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.34 ஆயிரத்து 846 கோடி வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மத்திய பிரதேசத்திற்கு ரூ.25 ஆயிரத்து 678 கோடியும், பீகாருக்கு ரூ.19 ஆயிரத்து 360 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு ரூ.15 ஆயிரத்து 803 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.13 ஆயிரத்து 406 கோடியும், அசாமிற்கு ரூ.12 ஆயிரத்து 289 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.11 ஆயிரத்து 386 கோடியும் வழங்கி உள்ளது.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், ஆந்திரா மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழகத்திற்கு ரூ.11 ஆயிரத்து 323 கோடி சிறப்பு நிதி வழங்கி உள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்திற்கு ரூ.10 ஆயிரத்து 234 கோடியும், குஜராத்திற்கு ரூ.10 ஆயிரத்து 69 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.9 ஆயிரத்து 359 கோடியும் வழங்கி உள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிக வருவாய் ஈட்டி வருகிறது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.இந்நிலையில் நிதி கமிஷன் பரிந்துரையின்படி தமிழகம் 100 ரூபாய் செலுத்தினால், வெறும் 29 ரூபாய்தான் திரும்ப கிடைக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார்.
எனினும் புள்ளி விவரங்களின் படி, மத்திய அரசின் சிறப்பு நிதி பெறுவதில் தமிழகம் 8-வது இடத்தில் இருக்கிறது. இதை பார்க்கும் போது, மத்திய அரசின் சிறப்பு உதவிகள் பெறுவதிலும் தமிழகத்திற்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாக தான் நிதி வழங்கப்பட்டிருப்பதாக திமுகவினர் கூறுகிறார்கள். இந்த நிதியாண்டிற்கு தமிழகத்திற்கு ரூ.1,480 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உத்தரபிரதேசத்திற்கு இன்னும் நிதி வழங்கப்படவில்லை. அதை அரசு விடுவிக்கும் போது. உத்தரப்பிரதேசத்திற்கான சிறப்பு நிதி உதவி அதிகரிக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications