தமிழக நகரங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.3,296.70 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு!
டெல்லி: தமிழ்நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.3,296.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் டோகான் சாஹு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். மேலும் இந்த ஒதுக்கீட்டில் ரூ. 656.15 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது; இது 2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்திற்கானதாகும் என்றும் மத்திய இணை அமைச்சர் டோகான் சாஹு தெரிவித்தார்.
லோக்சபாவில் இன்று மத்திய அமைச்சர் டோகான் சாஹு அளித்த பதில்: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் 2014 ஒரு அங்கமான சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2014 மார்ச் 31 அன்று முடிவடைந்தது. எனினும், 2014 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மத்திய அரசின் நிதிஉதவி விடுவிக்கப்பட்டுள்ள மற்றும் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பணி முன்னேற்றம் அடைந்துள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் 2017 மார்ச் 31ஆம் தேதி வரை அம்ருத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் காலமும் முடிவுக்கு வந்துவிட்டது, இந்தத் திட்டம் முடிவடைந்தவுடன் அனைத்துத் திட்டங்களும் அந்தந்த மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தவிர, அமைச்சகம் அதன் பிற பணிகளின் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு உதவுகிறது.

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் , மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.66.750 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ. 10, 951.47 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ. 4, 942 கோடி ஒதுக்கப்பட்டதில் ரூ.9.66.23 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 3,296.70 கோடி ஒதுக்கப்பட்டு ரூ. 656.15 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது 2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்திற்கானதாகும். இவ்வாறு மத்திய அமைச்சர் டோகான் சாஹு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications