ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக ’சீனியர்’ கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!
டெல்லி: லோக்சபா தேர்தலின் போது நெல்லை எக்ஸ்பிரஸில் ரூ4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான சிபிசிஐடி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
லோக்சபா தேர்தலின் போது கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ4 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதியின்றியும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் கொண்டு செல்லப்பட்ட ரூ4 கோடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் சதீஷ், அவரது சகோதர் நவீன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டது என கைது செய்யப்பட்ட 3 பேரும் வாக்குமூலம் கொடுத்ததால் இவ்வழக்கு சூடுபிடித்தது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ரூ4 கோடி ரொக்கம் பறிமுதல் தொடர்பாக பாஜகவின் நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். மேலும் கேசவ விநாயகத்தின் செல்போன் உள்ளிட்டவற்றை ஒப்படைக்கவும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தங்களது அனுமதியுடனே கேசவ விநாயகத்தை விசாரிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி போலீசார் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் சிபிசிஐடி பிரிவு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். இன்றைய விசாரணைக்குப் பின்னர், கேசவ விநாயகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications