தனியாக நின்ற கார்.. உள்ளே கட்டுக்கட்டாக பணம்.... டெல்லி ஆம் ஆத்மி சிஎம் ஆபீஸில் வேலை செய்பவர் கைது!
டெல்லி: டெல்லி தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் அதிஷியின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ரூ.5 லட்ச ரூபாய் பணத்துடன் சிக்கியுள்ளார். அவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவே பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள நிலையில், அதிஷி அங்கு முதல்வராக இருக்கிறார். பிப்ரவரி 5ம் தேதி புதன்கிழமை அங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ரூ.5 லட்சம் பறிமுதல்:
அங்கு இந்த முறை ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், டெல்லி முதல்வர் அதிஷியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. டெல்லியில் தேர்தல் நடக்கும் நிலையில், ஆம் ஆத்மி மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு இதுபோல பொய்களைப் பரப்புவதாகச் சாடியுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் காரில் பணம் நிறைந்த பை ஒன்று இருக்கிறது. அதன் அருகிலேயே ஊழியர் ஒருவர் நிற்கிறார். அவரது பெயர் கௌரவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் டெல்லி அரசில் மல்டி-டாஸ்கிங் டிபார்ட்மெண்ட்டில் அதிஷிக்காக பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
கவுரவ்:
இருப்பினும், ஆம் ஆத்மி பணத்தை எடுத்துச் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டை கவுரவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தனது சொந்த பணம் என்று வீடு விற்றதன் மூலம் கிடைத்த பணம் என்றும் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், "நான் எனது வீட்டை விற்றுவிட்டு மற்றொன்றை வாங்கியுள்ளேன். அதற்கான பணம் தான் இது. என்னென்ன ஆவணங்களைக் கேட்கிறார்களோ.. அதைத் தரத் தயாராகவே இருக்கிறேன்" என்றார்.
இருப்பினும், இது வாக்காளர்களுக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்றே டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கவுரவின் செல்போனை எடுத்து ஆய்வு செய்தோம். கவுரவ் அதிஷியின் தனிப்பட்ட உதவியாளர் பங்கஜுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு வார்டுகளில் மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்பதை கோட் வோர்ட் மூலம் பேசியுள்ளனர்" என்கிறார்கள்.
ஆம் ஆத்மி மறுப்பு:
மேலும், இது தொடர்பாக கவுரவ் மற்றும் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் ஆம் ஆத்மி இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளது. சொந்த பணத்தை எடுத்துச் செல்லும் ஒருவர் மீது திட்டமிட்டுப் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாகவும் ஆம் ஆத்மி மீது வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்த முயல்வதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பாஜகவே டெல்லியில் உள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருவதாகவும் விமர்சித்துள்ளது.
பாஜகவுக்கு பதிலடி:
ஆம் ஆத்மி தரப்பு மேலும் கூறுகையில், "உண்மையாக அவர்கள் எங்குப் பணத்தை விநியோகம் செய்தனரோ.. அங்கு டெல்லி போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. குடிசை பகுதிகளில் பாஜகவினர் மக்களுக்குப் பணத்தைக் கொடுத்தனர். ஆனால், அப்போது டெல்லி காவல்துறை கண்ணை மூடிக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பே, ஆம் ஆத்மி பணத்தை விநியோகிக்கிறார்கள் என்பது போன்ற பொய்யைப் பரப்ப முயன்றனர். இப்போது அவர்கள் மீண்டும் அதையே தான் செய்ய முயல்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications