மக்கள்தொகை கட்டுப்படுத்தும் திட்டம் தேவை.. நாட்டில் மத ஏற்றத்தாழ்வு அதிகமாகிடுச்சு! மோகன் பகவத் பரபர
டெல்லி: தசரா விழாவை முன்னிட்டு நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாட்டின் பல மாநிலங்களில் தசரா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தசரா விழாவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கோலாகலமாகப் பேரணியாகச் சென்றனர்.
’சிக்கல்’ டெல்லியிலிருந்து பறந்து வந்த வார்னிங்! ஆர்எஸ்எஸ் பாஜக பிரமுகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!
ஆர்எஸ்எஸ் பேரணி
ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் சார்பில் தசரா விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரம்மாண்ட பேரணிகளை நடத்துவார்கள். மற்ற விழாக்களைக் காட்டிலும் வருடாந்திர விஜயதசமி முக்கியமானதாகப் பார்க்கப்படும். ஏனென்றால் பல முக்கியமான பிரச்சினைகளில் ஆர்எஸ்எஸின் நிலைப்பாட்டை ஆர்எஸ்எஸ் தலைவர் இந்த நிகழ்வில் வெளிப்படையாக முன்வைப்பார்.
முதல் முறை
இந்த நிகழ்ச்சியில் மலையேறும் வீராங்கனையான சந்தோஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் வரலாற்றில் பெண் ஒருவர் சிறப்பு விருத்திரனாகக் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பேரணி செல்ல அதை, சிறப்பு விருந்தினர் சந்தோஷ் யாதவ் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கண்டு ரசித்தனர்.
சிறப்பு விருந்தினர்
இதில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். நாக்பூரில் பேசிய மோகன் பகவத், "பெண்களை நாம் சமத்துவத்துடன் நடத்த வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் தேவையான சொந்த முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அளிக்க வேண்டும். இருபாலருக்கும் சமமான வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். பெண்கள் இல்லாமல் சமூகம் முன்னேற முடியாது.
உலக பிரச்சினைகள்
சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பும் நம்பகத்தன்மையும் அதிகரித்து உள்ளது. பல சர்வதேச பிரச்சினைகளில் நமது நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு பின்னர் வெகு விரைவில் நமது பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. உலகப் பொருளாதார வல்லுநர்கள் பலரும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று கணித்துள்ளனர். விளையாட்டிலும் நமது வீரர்கள் நாட்டைப் பெருமைப்படுத்துகிறார்கள்.
திட்டமிட்டு தடைகள்
மாற்றம் என்பது உலகின் விதி, ஆனால் ஒருவர் சனாதன தர்மத்தில் உறுதியாக இருக்க வேண்டும். சனாதன தர்மத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு தடைகளை உருவாக்குகிறார்கள். நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைச் சிதைப்பதே இவர்களின் நோக்கமாகும். பொய்யான கருத்துகளைப் பரப்பி, வன்முறையை ஊக்குவிப்பதே அவர்கள் நோக்கம். இதற்காக இவர்கள் பல முயற்சிகளை எடுக்கிறார்கள்.
ஆங்கிலம்
ஆங்கிலம் குறித்து இங்கு பல்வேறு கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்கள். நாம் நமது வாழ்கையிலும் தொழிலிலும் சிறப்பாக இருக்க ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை மாணவர்களைப் பண்பட்டவர்களாகவும், தேசபக்தி கொண்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழிவகுக்கிறது. சமூகம் இதை ஆதரிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
நாடு உடைந்துவிடும்
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிற்கு மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை. மதம் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் கட்டாய மதமாற்றங்களும் அதிகரித்துவிட்டன. இதனால் இதுபோன்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடு உடைந்துவிடும் அச்சம் ஏற்படக்கூடும். இதற்கு கொசோவோ மற்றும் தெற்கு சூடான் உதாரணம்.
மத ஏற்ற தாழ்வுகள்
மக்கள்தொகை கட்டுப்பாட்டு மட்டுமின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.. இதை நம்மால் புறக்கணிக்க முடியாது. மக்கள் தொகைக்கு வளங்கள் தேவை. வளங்களை முறையாக உருவாக்காமல் மக்கள்தொகை மட்டும் வளர்ந்தால், அது ஒரு சுமையாகவே மாறும்.. அதேநேரம் வளர்ச்சிக்கு மக்கள் தொகை முக்கியம் எனவே இந்த இரண்டையும் மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும்.
சட்டம் தேவை
மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்கிறது. பிறப்பு விகிதத்தில் வேறுபாடுகள் உள்ளன. பேராசை, கட்டாய மாத மாற்றம் உள்ளிட்டவை இதற்குக் காரணம். எனவே, அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டம் தேவை" என்று அவர் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் இதைத் தொடர்ந்து வலியுறுத்தினாலும் கூட மத்திய பாஜக அரசு இதற்கு எதிராகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.