அரசின் "திறமையின்மை!" நாட்டில் அதிகரிக்கும் வறுமை! காரணமே இதுதான்!சொல்வது ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்!
டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
மத்தியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. 2014, 2019 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை உடன் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்து இருந்தது.
இந்தச் சூழலில் பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து, இந்தியாவில் இப்போது நிலவும் வறுமை, வேலையின்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து சில முக்கிய தகவல்கள் கூறப்பட்டு உள்ளது.
பாஜக - காங். மறைமுக கூட்டு.. பசு பராமரிப்புக்கு நாள்தோறும் ரூ.40 வழங்குவோம்.. அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆர்எஸ்எஸ்
நாட்டில் உள்ள பல எதிர்க்கட்சி தலைவர்களும் இந்தியாவில் வறுமை, வேலையின்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து விட்டதாகத் தொடர்ந்து சாடி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, 20 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும் பல தலைமுறைகளாக நமது பொருளாதாரக் கொள்கைகளே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். நிலைமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வறுமை
ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "கடந்த சில ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. இருப்பினும், சில துறைகளில் நாம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவது உண்மைதான். வறுமை என்பது அரக்கன் போல இருக்கும் பெரிய சவாலாக நம் முன் இருக்கிறது. இந்த வறுமை என்ற அரக்கனை நாம் வதம் செய்ய வேண்டியது முக்கியம், நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வது வேதனையளிக்கிறது.
வருமானம்
அதேபோல நாட்டில் 23 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு ரூ.275க்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாகவே உள்ளனர். இப்போது நாட்டில் 4 கோடி வேலையில்லாமல் உள்ளனர். நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி நாட்டில் வேலையின்மை விகிதம் 7.6%ஆக உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேலையின்மை நமது நாட்டில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காரணங்கள்
வேலையின்மை, தரமான கல்வி, ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவை வறுமையை உண்டாக்கும் காரணிகள் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையும் கூட வறுமைக்கு இப்படிப் பல காரணங்களைக் கூறுகிறது. உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றம், அரசின் திறமையின்மை கூட சில இடங்களில் வறுமைக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வேலைவாய்ப்பின்மை
வேலை தேடும் இளைஞர்களை தொழில்முனைபவர்களாக மாற நாம் ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அனைத்து வேலைகளும் முக்கியமானது தான். அனைத்து வேலைகளுக்கும் நாம் சமமான மரியாதை அளிக்க வேண்டும்.தோட்டக்காரர் தனது வேலைக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டால், அந்த வேலைக்கு யாருமே செல்ல விரும்ப மாட்டார்கள். எனவே, நாம் அனைத்து வேலைகளையும் மதிக்க வேண்டும்" என்றார்.
முக்கியம்
இந்தியாவில் வறுமை, வேலையின்மை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து விட்டதாக பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து சாடி வருகின்றனர். இந்தச் சூழலில் பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவரே இது தொடர்பாகப் பேசி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நிதின் கட்கரி
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, "இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து உள்ளது. நாட்டில் பலர் பணக்காரர்களாக இருந்தாலும் கூட, நாட்டின் ஒரு பகுதி மக்கள் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.. இதை தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.