அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு.. வரலாறு காணாத வீழ்ச்சி!
டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையான சரிவைச் சந்திந்துள்ளது. இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதட்டங்கள் அதிகரித்ததன் மத்தியில் 88.30 என்ற அளவுக்கு சரிவைப் பதிவு செய்துள்ளது இந்திய ரூபாய்.
அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள அதீத வரிகள் காரணமாகவும், தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி காரணமாகவும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்த நிலையில் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியைக் கண்டு வருகிறது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், நேற்று முன்தினம், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 87.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், நேற்று எப்போதும் இல்லாத வகையில் குறைந்தபட்சமாக ரூ.88.30 ஐ தொட்டது. பின்னர், 88.21 என்ற நிலையை எட்டியது. நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சரிவின் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் மதிப்பு 0.68% சரிந்தது.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் மீதான 50 சதவிகித அமெரிக்க வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால், இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஏற்பட்டதால், இந்திய ரூபாயின் மதிப்பானது தனது வேகத்தை இழந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் முந்தைய மிகக் குறைந்த அளவான 87.95 ஐ எட்டியது. இந்நிலையில் தற்போது மேலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் கரன்சி ரூபாய் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்குகளில் 9.7 பில்லியன் டாலர்களை விற்றுள்ளனர். கூடுதல் அமெரிக்க வரிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு அமர்வுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆகும். ஜவுளி மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த தொழில்களில் கூர்மையான மந்தநிலை வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் பொருளாதார தாக்கத்தை மோசமாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications