பிபிசியில் நடந்த ரெய்டு.. நறுக்கென கேட்ட பிரிட்டன் அமைச்சர்.. அதிரடியாக பதிலளித்த ஜெய்சங்கர்
ஜி20 மாநாட்டுக்கு இடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரிட்டன் அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து பேசினார். அப்போது, பிபிசியில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தை ஜெய்சங்கரிடம் அவர் எழுப்பினார்.
டெல்லி: பிபிசியில் வருவாய் வரித்துறை ரெய்டு நடத்திய விவகாரத்தை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இன்று எழுப்பினார்.
ஜேம்ஸ் கிளவர்லி கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஜெய்சங்கர், இறுதியில் அதிரடியாக பதிலளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய பிறகு, முதன்முறையாக அதுகுறித்து இந்திய - பிரிட்டன் அமைச்சர்கள் நேருக்கு நேர் பேசிக்கொண்டது இதுவே முதன்முறையாகும்.

மோடியை சீண்டிய பிபிசி
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து இரு ஆவணப்படங்களை பிபிசி ஊடகம் அண்மையில் வெளியிட்டது. குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும், அந்தக் கலவரத்துக்கும் தொடர்பு இருக்கும் வகையில் அந்த ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த ஆவணப்படத்தை சமூக வலைதளங்கள் அனைத்தில் இருந்தும் மத்திய அரசு தடை செய்தது. மேலும், இந்த ஆவணப்படத்தை திரையிடுதவற்கும் தடைவிதிக்கப்பட்டது.

அதிர வைத்த ரெய்டு
எனினும், மத்திய அரசின் தடையை மீறி நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களிலும், பொதுவெளிகளிலும் இந்த ஆவணப்படங்களை மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் திரையிட்டனர். இதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சர்வேயில் ஈடுபட்டனர். இது, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

சீறிய பிரிட்டன்
இந்நிலையில், பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த ரெய்டை கண்டிக்கும் வகையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உணர்ச்சி பொங்க பேசினர். எந்த நாடாக இருந்தாலும் ஊடக சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும், பிபிசியின் குரல்வளையை நெரிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு விவகாரத்தை இந்தியாவிடம் எழுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அமைச்சரின் அதிரடி பதில்
இந்த சூழலில், இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இன்று காலை டெல்லி வந்தார். பின்னர், இந்த மாநாட்டுக்கு இடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து பேசினார். அப்போது, பிபிசியில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தை சற்று குரலை உயர்த்தி ஜெய்சங்கரிடம் அவர் எழுப்பினார். கிளவர்லி கூறியதை பொறுமையாக கேட்ட ஜெய்சங்கர் கடைசியில், "யாராக இருந்தாலும் எந்த நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் அவை செயல்பட்டால் எங்கள் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்" என அதிரடியாக பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications