சபரிமலை கோவிலில் தீண்டாமையா? மறுசீராய்வு மனுவில் சுப்ரீம் கோர்ட்டில் பரபர வாதம்!
உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் மிகவும் பரபரப்பான வாதங்கள் செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் மிகவும் பரபரப்பான வாதங்கள் செய்யப்பட்டு வருகிறது.
சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மொத்தம் 65 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கடந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி கூறியது.

இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், டி.ஒய். சந்திரசூட், ஏ.எம் கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்து வருகிறது. கேரள அரசு சார்பாகவும் இதில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மனுக்கள் மீதான வாதம் இன்று மிக தீவிரமாக நடந்தது.
இதில் நாயர் அமைப்புகளின் சார்பாக சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக வாதிட்ட வழக்கறிஞர் பராசரன் மிக கடுமையான வாதங்களை வைத்தார். நீதிபதிகளும் இதில் கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள்.
வழக்கறிஞர் பராசரன்: ஒரு கோவிலின் விதிகளை மாற்றுவது உரிமைக்கு எதிரானது. அது சட்ட விதி 15க்கு புறம்பானது. இந்த கோவிலில் எங்கும் தீண்டாமை கடைபிடிக்கப்படவில்லை. இதனால் சட்டப்பிரிவு 17ஐ பற்றி இங்கு பேச வேண்டியது இல்லை.
ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி கடவுள். அதனால்தான் இந்து வழக்கப்படி பெண்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் இது தீண்டாமை கிடையாது. 50 வயதுக்கு மேற்பட்ட, 15 வயதிற்கு குறைவான தலித் பெண்கள், பிற மத பெண்கள் கோவிலுக்குள் செல்கிறார்கள். அதனால் இங்கு தீண்டாமை தடை சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை, என்று கூறினார்.
நீதிபதி நாரிமன்: ஆனால் ஒரு தலித் பெண், 50 வயதிற்குள் இருந்து அவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றால் அது தவறானது. அப்போது கண்டிப்பாக , தீண்டாமை தடை சட்டத்தை வைத்து விசாரிக்கலாம்.
வழக்கறிஞர் பராசரன்: ஆனால் இங்கு அப்படி இல்லை. இங்கு எல்லா இனத்தை சேர்ந்த இளம் பெண்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலித் பெண்களுக்கு மட்டும் தனியாக தடை கிடையாது.
தந்திரி ராஜீவாரு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கிரி: இந்த கோவிலில் எங்கும் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை. இது கோவில் விதி. சட்டவிதி 25 படி ஒரு மதத்தின் விதிகளில் தலையிட முடியாது. கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது, அங்கு செல்லும் பிற பக்தர்களுக்கு இழைக்கும் அநீதி.
முன்னாள் தேவசம் போர்ட் தலைவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி : இங்கு பெண்களுக்கு எதிராகவோ, தலித்துகளுக்கு எதிராகவோ சட்டம் இல்லை. இது இயற்கை சம்பந்தப்பட்டது. மதம் சம்பந்தப்பட்டது மட்டுமே.
நீதிபதி நாரிமன்: நாங்கள் வழங்கிய தீர்ப்பு பெரிய ஆலோசனைக்கு பின்பே வழங்கப்பட்டது. பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பின்பே தீர்ப்பை வழங்கினோம் என்று கூறினார். இந்த வழக்கில் இன்னும் பல வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்பதால் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications