அந்த ஒற்றை வார்த்தை... 5 ஆண்டுகளாக காங். கத்தியது அத்தனையும் வீணாப் போனது!
டெல்லி: லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் பாஜகவுக்கு எதிராக சரமாரி பதிலடி கொடுத்து வந்தது காங்கிரஸ். இப்போது காங்கிரஸின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா உதிர்த்த ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகாலம் காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்கள் அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராகிறதே என கவலைப்படுகின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
லோக்சபா தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 5 ஆண்டுகால பாஜக அரசின் தோல்வியை பற்றியே தொடர்ந்து பேசிவந்தனர். இந்த பேச்சுகளுக்கு பதிலடியாக தேசியவாதம், தேசப்பற்று என்கிற முழக்கங்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.
இதனிடையே வாக்குப் பதிவுகளும் ஒவ்வொரு கட்டமாக நிறைவடைந்து வந்தன. இறுதி கட்ட வாக்குப் பதிவு நெருங்க நெருங்க தேர்தல் களம் அதிரி புதிரியாக அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸும் சீக்கியர் படுகொலையும்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலடி தருவதாக, 1980களில் ராஜீவ் காந்தி மீதான புகார்களை அடுத்தடுத்து வீசினார் மோடி. காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்களும் ஆகக் கூடுமானவரை பதிலடி தந்தனர். இதில் 1984 சீக்கியர் படுகொலை விவகாரமும் ஒன்று.

சாம்பிட்ரோடா சர்ச்சை
இவ்விவகாரத்தை மோடி பேசிய போதும் கண்டும் காணாமல்தான் காங்கிரஸ் இருந்து வந்தது. ஆர்வக் கோளாறில் பஞ்சாப் பொற்கோவிலுக்குப் போய் அதை படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா. மேலும் செய்தியாளர்களிடம் சீக்கியர் படுகொலை குறித்த கேள்விக்கு, ‘அது நடந்துவிட்டதுதானே' என ஒற்றைவார்த்தையைத்தான் உதிர்த்தார் சாம்பிட்ரோடா.

காங். மீது மோடி பாய்ச்சல்
இந்த ஒற்றைவார்த்தைதான் இப்போது காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. சாம்பிட்ரோடாவின் அந்த ஒற்றைவார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாஜக கூட்டணி காங்கிரஸை நாலாபுறமும் நாறடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸின் ஆணவத்தைப் பாருங்க.. அக்கட்சி அழியப் போகிறது என சூடேற்றுகிறார் பிரதமர் மோடி.

புயலான சாம் பிட்ரோடா
வேறுவழியே இல்லாமல் ராகுல் காந்தியும் உணர்வுவயப்பட்ட நிலையிம் சாம்பிட்ரோடாவை மன்னிப்பு கேட்க வைத்தார். ஆனாலும் பாஜக விட்டுவிடுமா அல்வா போல் கிடைத்த வாய்ப்பை? அனைத்து திசைகளிலும் சாம்பிட்ரோடாவின் ஒற்றை வார்த்தையை வைத்து பந்தாடிக் கொண்டிருக்கிறது பாஜக. சாம் பிட்ரோடாவின் இந்த ஒற்றை வார்த்தைப் புயலானது கடந்த 5 ஆண்டுகளாக மோடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட காங்கிரஸின் அத்தனை விமர்சனங்களையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்!












Click it and Unblock the Notifications