சனாதன ஒழிப்பு பேச்சு.. உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீது விசாரணை நடந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி பங்கேற்று பேசினார்.

இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில். வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். அதேபோல் தான் சனாதனம்.'' என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் பாஜக முதல்வர்கள் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போலீஸ் நிலையங்கள் புகார்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அவருக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் நடந்தன. அதோடு உதயநிதி ஸ்டாலின் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்பட 262 பேர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர். அதோடு சனாதன மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளது. இதனை அறிந்தே அவர் பேசியுள்ளார். அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே தான் சனாதான ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‛‛சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசிலமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும். அதோடு சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்த ரிட் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications