அடுத்த சர்ச்சை.. தமிழ் மொழியை விட பழமையானது சமஸ்கிருதம்! பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே பேச்சு
டெல்லி: தமிழ் மொழி பழமையான மொழிதான்; ஆனால் தமிழ் மொழியை விட மூத்த மொழி சமஸ்கிருதம்தான் என பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்பியான நிஷிகாந்த் துபே பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று காலை தொடங்கியது. இன்று காலை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்களை நாகரீகம் அற்றவர்கள் என விமர்சித்தார். இதனால் தமிழக எம்பிக்கள் கொந்தளிப்புடன் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தமது பேச்சை தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்திய தர்மேந்திர பிரதான் மீது திமுக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தர்மேந்திர பிரதான் கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல லோக்சபாவில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியிருக்கிறார்.
லோக்சபாவில் இன்று பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, தமிழ்நாட்டு மக்களை திமுக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது; தமிழ் மொழி பழமையானதுதான்; ஆனால் தமிழ் மொழியை விட மூத்த மொழி சமஸ்கிருதம்தான்.
தமிழ்நாட்டு கோவில்களிலும் சமஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன. மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் 1973-ம் ஆண்டு காங்கிரஸ்தான் லோக்சபா தொகுதிகளை அதிகப்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்த போதும் தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை காங்கிரஸ்தான் உயர்த்த மறுத்தது என்றார்.
மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற அச்சத்தில்தான் திமுக இப்படி நாடகமாடுகிறது. திமுகவைப் பொறுத்தவரை தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளை எதிர்க்கிறது; ஆனால் ஆங்கிலேயரின் மொழியைத்தான் அமல்படுத்த வேண்டும் என துடிக்கிறது என்றும் நிஷிகாந்த் துபே பேசினார். அவரது இந்த ஆணவப் பேச்சும் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications