நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸில் முக்கிய பொறுப்பு.. என்ன தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேதி என்பது அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று இந்திய தேர்தல் ஆணையர்கள் டிஜிபி, மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வரும் 8 ம் தேதி இந்த ஆலோசனை என்பது நடைபெற உள்ளது.
காங்கிரசுக்கு முக்கிய தேர்தல்: இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 2014, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் இந்த தேர்தலில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதனை அந்த கட்சியும் உணர்ந்துள்ளது. இதனால் தான் பாஜகவை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிட வேண்டும் என தொடக்கம் முதலே காங்கிரஸ் வலியுறுத்தியது.
கார்கே அறிவிப்பு: அதோடு 28 கட்சிகள் அடங்கிய ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் அதிக எம்பிக்களை கொண்ட கட்சியாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சிக்கான மத்திய வார்ரூம் அமைத்து அதற்கான நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வார்ரூம் அமைப்பு: 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான மத்திய வார் ரூம் அமைக்கப்பபட்டுள்ளது. இதில் வார்ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை தலைவர்களாக கோகுல் புட்டெயில், நவீன் ஷர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு வார்ரூம் தகவல் தொடர்பு பிரிவு தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர்: இதில் வார்ரூம் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அதன்பிறகு விருப்ப ஓய்வு பெற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இவர் அம்மாநில வார்ரூம் தலைவராக செயல்பட்டார். மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் முக்கிய பங்காற்றி இருந்தார்.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வென்றது. மாறாக கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின்போது அம்மாநில வார்ரூம் பொறுப்பாளராக இவர் செயல்பட்டார். இருப்பினும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அங்கு பாஜக வெற்றி பெற்று அரியணை ஏறியது.
வார் ரூம் ஏன் முக்கியம்: தற்போது சமூக வலைதளங்களை ஒவ்வொருவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பொய் மற்றும் வதந்திகளை சிலர் வேகமாக வலைதளங்களில் பரப்பி விடுகின்றனர். வலைதள பொய் மற்றும் வதந்தி என்பது தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்திவிடும். இதனால் இதுபோன்ற பொய் மற்றும் வதந்திகளை முறியடிப்பது என்பது ஒவ்வொரு கட்சிகளுக்கும் முக்கியமானதாகும். இதனை மேற்கொள்வது தான் வார் ரூம்.
அதாவது சமூக வலைதள தேர்தல்களில் பரபரப்ப்படும் வதந்திகள் பரவாமல் தடுப்பது மற்றும் வலைதள பிரசாரங்களை மேற்கொள்வது, தேர்தல் வாக்குறுதிகளை வலைதளங்கள் மூலம் ஒவ்வொரு மக்களையும் சென்றடைய வைப்பது, தங்களை எதிர்க்கும் கட்சிகளின் சித்தாந்த நிலைப்பாடு மற்றும் தோல்விகள் குறித்து மக்களிடம் எடுத்து கூறும் பணிகளை வார்ரூம் சார்பில் மேற்கொள்ளப்படும். இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மத்திய வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications