சசிகாந்த் செந்திலை கூப்டுங்க.. ராஜஸ்தானில் காங்கிரஸின் ராஜதந்திரம்! இன்ப அதிர்ச்சி இருக்காமே
டெல்லி: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொண்டது. குறிப்பாக தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது. ராஜஸ்தான் மாநில தேர்தல் பார்வையாளராக மதுசுதன் மிஸ்திரியை நியமித்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை தேர்தல் பார்வையாளராக அறிவித்தது.
அக்கட்சியின் சமூக வலைதள தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு வியூகங்களை வகுத்து, வதந்திகளை முறியடித்தார். மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஏஎஸ் பதவியை விட்டே விலகிய சசிகாந்த் செந்தில், மக்கள் நடத்திய போராட்டங்களில் பங்கெடுத்தார். அதன் தொடர்ச்சியாக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.
இவரது முழு திறமையை உலகம் கண்டுகொண்டது கர்நாடகா தேர்தல் களத்தில்தான். சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணிதான் கர்நாடக தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய #CryPMPayCM, #PayCM போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி பாஜக அரசின் 40 சதவீத கமிஷனை அம்பலப்படுத்தியது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸின் மூத்த தேர்தல் பொறுப்பாளர் மிஸ்திரிக்கு துணையாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக சசிகாந்த் செந்தில் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டார். தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது எக்ஸ் சமூக வலைதளத்தில் அது குறித்து ஒரு பதிவை அவர் வெளியிட்டு உள்ளார்.
அதில். "பணத்தாலும், வெறுப்பு பிரச்சாரத்தாலும் வாக்குகளை வாங்க முடியும் என்ற புணைவு ராஜஸ்தானில் மோசமாக தகர்க்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் வரலாறு படைக்கப்படும். இன்ப அதிர்ச்சிக்கு காத்திருங்கள். பாஜக 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டில் மேம்படுத்திக்கொள்ளட்டும். நீங்கள் வலிமையான எதிரியாக இந்திய மக்களுக்கே எதிராக உள்ளீர்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications