இந்திய எல்லையில் சியாச்சினுக்கு மிக அருகே.. சீனா அமைக்கும் புதிய சாலை! எதற்காக தெரியுமா? பகீர் தகவல்
டெல்லி: எல்லைக்கு மிக அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா சட்டவிரோதமாக புதிய சாலை அமைத்துள்ளது இப்போது வெளியான சாட்டிலைட் படங்களில் உறுதியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே எல்லையில் மோதல் தொடர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 2020இல் நடந்த கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது.

அதன் பிறகும் எல்லையில் சீனா பல கட்டுமானங்களை மேற்கொண்டது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறி வந்தனர்.
புதிய சாலை: இதற்கிடையே காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு மிக அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக ஒரு சாலையை அமைத்துள்ளது. அப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் இதை உறுதி செய்கிறது. நேச்சர் தேசாய் என்ற ட்விட்டர் கணக்கு இந்த சாட்டிலைட் படங்களைப் பகிர்ந்துள்ளது. கடந்தாண்டு சியாச்சின் அருகே இந்த இடத்தில் சாலை இல்லாத நிலையில், இப்போது புதிதாகச் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக சாட்டிலைட் படங்களில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனா இந்த சாலையை அமைத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் இந்த ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியைப் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது. பிறகு 1963இல் இந்த பகுதியை இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் சீனாவுக்குப் பாகிஸ்தான் கொடுத்ததாக அறிவித்தார்கள். இருப்பினும், இது இந்தியாவின் ஒரு பகுதி என்பதால் இதை இந்த பாகிஸ்தான் சீனா ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கவில்லை.
எங்கே அமைந்துள்ளது: அங்கு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்து வெறும் 50 கிமீ வடக்கே இந்த சாலையை அமைத்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங்கில் G219 நெடுஞ்சாலை உடன் இந்த சாலையை இணைப்பது போலத் தெரிகிறது. கடந்தாண்டு அவர்கள் இந்த சாலையை அமைத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு மட்டும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் இரண்டு முறை இந்த எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலை முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் இந்தியா இதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதி: இந்த சாலை டிரான்ஸ்-காரகோரம் பாதையில் அமைந்துள்ளது. இது வரலாற்று ரீதியாகக் காஷ்மீரின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தில் கூட இது இந்தியாவின் பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 5,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பகுதியைச் சுதந்திரத்தின் போது பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து. பிறகு அதைச் சீனாவுக்குக் கொடுப்பதாகவும் அறிவித்தது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்படும் இதுபோன்ற மாற்றமும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இது அப்பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
திட்டம் என்ன: பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தைச் சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலையை அமைத்துள்ளார்.. பாகிஸ்தானில் இருந்து வரும் சாலை ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாகச் சீனாவின் தேசிய நெடுஞ்சாலை G219 இணைக்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்குக் கனிமங்களை, குறிப்பாக யுரேனியத்தை கொண்டு செல்லவே இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதைச் சீனா ராணுவத்திற்கும் பயன்படுத்தலாம் என்பதாலேயே இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications