பாட்னா சாஹிப்பில் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்துடன் மோதும் காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா!
டெல்லி: பீகார் மாநிலம் பாட்னா சாஹிப்பில் காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜகவின் சார்பில் பீகாரின் பாட்னா சாஹிப்பில் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா இரு முறை போட்டியிட்டு எம்பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜகவில் அதிருப்தி எம்பியாக இருந்து வந்தார்.
ரபேல் குறித்து பல்வேறு கேள்விகளை சின்ஹா எழுப்பினார். இதனால் பாஜக தலைமை இவர் மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்களான எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மோடியும் அமித்ஷாவும் நடத்திய விதம் சரியில்லை என கூறி அக்கட்சியிலிருந்து சின்ஹா விலகினார்.
இதையடுத்து ஏப்ரல் 6-ஆம் தேதி காங்கிரஸில் இணைவதாக தெரிவித்தார். மேலும் தான் காங்கிரஸில் இணைவதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில் பாஜக மூத்த தலைவர்களை அந்த இருவரும் நடத்திய விதம் என்னை மிகவும் பாதித்துவிட்டது.
பாஜகவுக்கு ஷாக் கொடுத்த சத்ருகன் சின்கா.. காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
மேலும் என்னை திரிணமூல், ஆம் ஆத்மி கட்சியினர் அழைத்தனர். ஆனால் பாட்னா சாஹிப்பில் எனக்கு வாய்ப்பு தரும் கட்சியில் இணைய வேண்டும் என விரும்பினேன். அதன்படி காங்கிரஸில் இணையவுள்ளேன் என்றார்.
இதையடுத்து இன்றைய தினம் ராகுலை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சத்ருகன் சின்ஹா இணைந்தார். மேலும் அவர் பாட்னா சாஹிப்பில் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.