லவ் ஜிகாத் வழக்கு... தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்... மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
டெல்லி: லவ் ஜிகாத் தொடர்பாகப் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
காதல் என்ற பெயரில் இந்து பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதைத் தடுக்க விரைவில் ஒரு சட்டம் இயற்றப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன்படி லவ் ஜிகாத் என்ற சட்டத்தைக் கடந்தாண்டு பிற்பகுதியில் அறிமுகப்படுத்தியது.
இதேபோல ஹிமச்சால பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் என பாஜக ஆளும் பல மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் இந்தச் சட்டங்கள் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும் பறிக்கும்படி இருப்பதாகக் கூறி இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
திருணம் செய்ய அரசின் ஒப்புதலா
இது தொடர்பான விசாரணையில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங், இந்தச் சட்டங்களின் சில விதிகள் பயங்கரமானவையாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், திருமணம் செய்வதற்கு அரசின் ஒப்புதல் வேண்டும் என்பது மோசமானது என்றும் வாதிட்டார்.
தடை விதிக்க முடியாது
இதையடுத்து இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்குமாறு சி.யு. சிங் வாதிட்டார். மாநில அரசுகளின் பதில்களைக் கேட்காமல் சட்டங்களுக்குத் தடை விதிப்பது சரியாக இருக்காது என்று கூறி தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
விசாரணை
இருப்பினும், லவ் ஜிகாத்திற்கு எதிரான இந்த சட்டங்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டவையா என்பது குறித்தும் அவை செல்லுபடியாகுமா என்பது குறித்தும் விசாரணை செய்ய நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
உபி சட்டம்
உத்தரப் பிரதேசத்தில் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். மேலும், திருமணத்திற்காக ஒருவர் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டிருந்தால், அத்திருமணம் செல்லாது என்று அறிவிக்க முடியும்.
மபி சட்டம்
இதேபோல மத்தியப் பிரதேசத்திலும் மத சுந்தர மசோதா 2020 அம்மாநில அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் திருமணத்திற்காகக் கட்டாய மதம் மாற்றத்தில் ஈடுபடுத்தும் நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.