விடாது கறுப்பாய் துரத்தும் சு.சுவாமி! ராமர் பாலம் தொடர்பான வழக்கை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
டெல்லி: தமிழகத்தின் பாம்பன் தீவுகள் அருகே ராமர் பாலம் உள்ளதாகவும் அதை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ராமேஸ்வரம் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்த திட்டுகள் தொடர்ச்சியாக இருப்பதால் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. அதேநேரத்தில் புராணங்கள் அடிப்படையில் இது ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டிய பாலம் என்கிற கருத்தும் உள்ளது.
நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம்! பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் விறு விறு!
ராமர் பாலம் சர்ச்சை
தமிழக அரசியலில் ராமர் பாலம் மீக நீண்டகாலமாக சர்ச்சையாகவும் உள்ளது. இந்த ராமர் பாலத்தை முன்வைத்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாலம் கட்டுவதற்கு ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி கேட்டார். அதற்காகத்தான் கருணாநிதியின் தலைக்கு இந்து தீவிரவாதிகள் விலைவைத்து பிரகடனம் செய்த சம்பவங்களும் நடந்தது.
சேது கால்வாய் திட்டம்
இந்த ராமர் பாலமானது, சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பேசுபொருளாகும் போதெல்லாம் விவாதத்துக்குரியதாகியது. இலங்கையின் மன்னார் மற்றும் பாக்ஜலசந்தி நீரிணைப்பை இணைக்க 83 கி.மீ ஆழத்துக்கு கால்வாய் உருவாக்கி கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதுதான் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். இதனை செயல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தீவிரம் காட்டியது.
சு.சுவாமி வழக்கு
ஆனால் இந்துத்துவா அமைப்புகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சேதுக்கால்வாய் திட்டத்தால் ராமர் கட்டிய பாலம் சேதமடையும்; ஆகையால் சேதுக் கால்வாய் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் சேது கால்வாய் திட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
விரைவில் விசாரணை
சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு நீண்டகாலமாக கிடப்பில் இருந்தது. இம்மனு மீதான விசாரணை கடந்த மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால் விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும்; விசாரணைப் பட்டியலில் வழக்கும் இடம்பெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்திருக்கிறார்.