கார்த்தி சிதம்பரம்.. நீங்க வெளிநாடு போகலாம்… ஒரு வழியாக அனுமதி தந்த உச்ச நீதி மன்றம்
டெல்லி:நீண்ட போராட்டத்துக்கு பிறகு... கடுமையான கட்டுப்பாடுகளுடன் கார்த்தி சிதம்பரம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2006-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.305 கோடி முதலீடு செய்தது.

அதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என்றும், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தியது.
அப்போது நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்காகவும், அதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகவும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே விசாரித்து வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் முதல் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். பிப்ரவரி 21 முதல் 28 வரை பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அனுமதி வழங்குமாறு கார்த்தி மனுவில் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த மாதம் கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, கார்த்தியிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, விசாரணை நடத்தவுள்ள தேதிகளை வரும் 30ம் தேதி தெரிவிக்குமாறு, அமலாக்கத்துறைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications