இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு தொடரும்? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: கல்வி, வேலைவாய்ப்பில் இன்னமும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு நடைமுறை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2018-ல் மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா ஜாதியினருக்கு வேலைவாய்ப்பில் 12%; கல்வியில் 13% இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவைதான் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள்.

50%-க்கும் அதிகமான இடஒதுக்கீடு
இந்த வழக்குகளின் முக்கிய சாராம்சம், முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி (இந்திரா சஹானி வழக்கு- மண்டல் கமிஷன் வழக்கு) இடஒதுக்கீடு 50%தான் இருக்க வேண்டும்; ஆனால் மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் 50% என்ற அளவுகோல் மீறப்பட்டது என்பதாகும். இதேபோல் தமிழக அரசின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின் தமிழக அரசுக்கு எதிரான வழக்குகள் மீது விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனிடையே மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ். அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் இந்த பெஞ்ச்சில் இடம்பெற்றுள்ளனர்.

இடஒதுக்கீடும் மாநில அரசுகளும்
அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்: மண்டல் தீர்ப்பு அடிப்படையிலும் சூழல்கள் அடிப்படையிலும் இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் நிர்ணயித்து கொள்ள வேண்டும். மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது சரிதான். மத்திய அரசு முற்ப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. இதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பான இடஒதுக்கீடு 50%-க்கும் மேல் இருக்கக் கூடாது என்ற உத்தரவை மீறியதாகும். இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார்.

இன்னமும் எத்தனை தலைமுறைகளுக்கு?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 50% இடஒதுக்கீடு வரம்பு இல்லை என்றால் சமூகங்களிடையேயயான சமத்துவம் என்பது எப்படி வரும்? இந்த விவகாரத்தை தன்னிச்சையாகவே நாங்கள் கையாளவும் நேரிடும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்னமும் எத்தனை தலைமுறைகளுக்குத்தான் இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்? என்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் முன்னேறவில்லையா?
மேலும், நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாக்கிவிட்ட நிலையில் எத்தனை நலத்திட்டங்களை அரசுகள் செயல்படுத்தியும் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னமும் முன்னேற்றம் பெறவில்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி, நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். அதற்காக பிற்படுத்தப்பட் வகுப்புகள் 50%-ல் இருந்து 20% என குறைந்துவிடாது. இந்த நாட்டில் இன்னமும் பட்டினிச் சாவுகள் இருக்கின்றன.

தீர்ப்பில் மறுபரிசீலனை தேவை
இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பு (இந்த வழக்கில்தான் இடஒதுக்கீடு 50%க்கு மேல் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது) குப்பைக்கு போக வேண்டியது என்று சொல்லவில்லை. 30 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்றார். இவ்வழக்கின் விவாதங்கள் திங்கள்கிழமையும் தொடர உள்ளது.












Click it and Unblock the Notifications