எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்.. மத்திய அரசுக்கு டோஸ் விட்ட தலைமை நீதிபதி ரமணா!
டெல்லி: தீர்ப்பாயங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பும் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றாததை சுட்டிக் காட்டி எங்களுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம்.. நாங்கள் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மிக கடுமையாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் கடந்த மாதம் தேசிய சட்டசேவைகள் ஆணைய நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, காவல்நிலைய லாக்கப் மரணங்களை கடுமையாக விமர்சித்தார்.
அதன்பின்னர் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளையும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்தார். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால் சட்டங்களின் உள்நோக்கம் என்ன என்பது புரியாமல் போய்விடுகிறது. இப்படி விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றபப்டுவதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் முந்தைய விவாதங்கள் அறிவுப்பூர்வமாக இருந்தன. தொழிற்சாலை பிரச்சனைகள் தொடர்பான ஒரு சட்டம் கொண்டுவரப்பட்ட போது தமிழகத்தின் மார்க்சிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி விரிவான விவாதங்களை எடுத்து வைத்தது நன்றாக நினைவில் இருக்கிறது. நீதித்துறை சார்ந்தவர்கள் பொதுவிவாதங்களில் பங்கேற்பதும் அவசியமாகிறது என்றார். தலைமை நீதிபதியின் இந்த கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய பா.ஜ.க.அரசை கடுமையாக சாடின.

தீர்ப்பாய வழக்கு
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில், தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இருந்தது.

உத்தரவுகளை மதிப்பதே இல்லை
இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே மத்திய அரசுக்கு பலமுறை உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பல முறை கால அவகாசமும் வழங்கிவிட்டோம்.

பொறுமையை சோதிக்காதீங்க
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதே இல்லை. எங்களுடைய பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம். மத்திய அரசுடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவும் இல்லை. தீர்ப்பாயங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பதை நிரப்பாமல் விட்டால் அத்தனை பணிகளும் முடங்கித்தான் போய் நிர்வாகம் சீர்குலையும். இரண்டு ஆண்டுகளாகியும் காலி பணியிடங்களை ஏன் நிரப்பாமல் இருக்கிறீர்கள்? தீர்ப்பாயங்கள் நாட்டுக்கு மிக முக்கியமானவை.

மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு?
மத்திய அரசு செப்டம்பர் 13-ந் தேதிக்குள் காலிப் பணியிடங்களை நிரப்பத்தான் வேண்டும். இல்லை எனில் நீதிமன்றத்துக்கு 3 வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான நியமனங்களை நிரப்ப நீதிமன்றம்மே உத்தரவிட்டு நிரப்புவது; இருக்கின்றன அத்தனை தீர்ப்பாயங்களையும் மூடிவிட்டு வழக்குகளை உயர்நீதிமன்றங்களை இனிமேல் விசாரிக்க சொல்லலாம் அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடருவது ஆகியவைதான் அந்த 3 வாய்ப்புகள் என கடுமையாக கூறினார்.












Click it and Unblock the Notifications