புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகள்- மத்திய அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.861.9 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்துக்கு அடுத்த வாரம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தது.
மேலும் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது கட்டுமான பணிகளை தொடங்குவது ஏன் என்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிரான மனுக்கள் மீது தீர்ப்பு வரும் வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கு மரங்களை வெட்டவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து மத்திய அரசு தரப்பில், புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமானப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான ஆவண பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் உச்சநீதிம்ன்றம் தெரிவித்துள்ளது.