விவிபாட் ஒப்புகை சீட்டு வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை, விவிபாட் கருவி மூலம் ஒப்பிட்டு பார்க்கும் முறையை அதிகப்படுத்த வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்து உள்ளது.
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை, விவிபாட் கருவி மூலம் ஒப்பிட்டு பார்க்கும் முறையை அதிகப்படுத்த வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 5 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பல இடங்களில் 5 கட்ட தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார் வந்தது.

வாக்குப்பதிவு எந்திரம் வேலை செய்யவில்லை, ஒரு கட்சிக்கு வாக்களித்தால் வேறு ஒரு கட்சிக்கு வாக்கு செல்கிறது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டது. ஆனால் இதில் தேர்தல் ஆணையம் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கு எதிராக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையான குரல் கொடுத்தார். அவர் இது குறித்து எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி லோக்சபா தேர்தலில் விவிபாட் கருவி (VVPAT) எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு கருவியை பயன்படுத்த வேண்டும்.
50%க்கு அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் இதை பயன்படுத்த வேண்டும். அதை வைத்து பதிவான வாக்குகளை சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் வாக்குப்பதிவு எந்திரம் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி 50%க்கு அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் விவிபாட் கருவியை பயன்படுத்த வேண்டும் என்று இதில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை அடுத்து தற்போது இது தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. மொத்தம் 21 முக்கிய கட்சிகள் இந்த மனுவை அளித்துள்ளது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், கேசி வேணுகோபால், டெரிக் ஓ பிரைன், சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், சதிஷ் சந்திரா மிஸ்ரா, மு க ஸ்டாலின், டி. கே ரங்கராஜன், பருகி அப்துல்லா, எஸ்எஸ் ரெட்டி, டேனிஷ் அலி, அஜித் சிங் ஆகியோர் இந்த மனுக்களை அளித்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று இருந்தார். இந்த நிலையில் விவிபாட் கருவி மூலம் ஒப்பிட்டு பார்க்கும் முறையை அதிகப்படுத்த வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் சரிபார்க்க அவசியமில்லை. ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தவும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications