ரூ 4,800 கோடி முறைகேடு! சிபிஐ விசாரிக்க தடை கோரிய எடப்பாடியின் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி: தன்னை சிபிஐ விசாரிக்க தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரூ 4800 கோடி மதிப்பிலான 5 நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய உறவினர்களுக்கு முறைகேடாக அளித்துள்ளார்.
இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்ததாக ஆர் எஸ் பாரதி தெரிவித்திருந்தார். இதையடுத்து 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்தலாம். வழக்குப் பதிவும் செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

இபிஎஸ் மேல்முறையீடு
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியை சிபிஐ விசாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

4 ஆண்டுகள்
இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்றைய தினம் அதிமுகவின் பொதுக் குழு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்றைய தினம் ஹைகோர்ட் தீர்ப்பளிக்கிறது.

இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினை தலைதூக்கி வரும் நிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி மீதான சிபிஐ விசாரணை வழக்கும் விசாரணைக்கு வருகிறது. அது போல் ஓபிஎஸ் தொடர்ந்து பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது சந்தேகமே. எனவே இந்த இரு வழக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.












Click it and Unblock the Notifications