14 அப்பாவிகள் சுட்டு கொலை.. ராணுவத்தினருக்கு எதிரான நாகாலாந்து போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் தடை
டெல்லி: 14 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் என சந்தேகித்து சுட்டுப் படுகொலை செயத 30 ராணுவ வீரர்களுக்கு எதிரான நாகாலாந்து போலீசாரின் விசாரணைக்கு உச்சநிநிதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மியான்மர் எல்லையில் பதுங்கி இருந்து இந்தியாவுக்குள் பாதுகாப்பு படையினர் மீது நாகா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.

இதனால் நாகாலாந்தில் ஆயுதப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டமும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி, 14 அப்பாவி தொழிலாளர்களை பயங்கரவாதிகள் என சந்தேகித்து ஆயுதப் படையினர் ஈவிரக்கமே இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினருக்கு எதிராகவும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு நாகாலாந்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யபப்ட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராணுவத்தினருக்கு எதிரான நாகாலாந்து போலீசாரின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications