தகுதி நீக்கம்.. ஓபிஎஸ் உட்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் கதி என்ன? பிப்.4ல் உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் திமுகவின் மனு மீது வரும் 4-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
2017-ம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவானது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்தது.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவு 11 அதிமுக எம்.எல்.ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
இதன் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் அதிமுகவில் இணைந்தது. இந்நிலையில் அதிமுக கொறடா உத்தரவை மீறி எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கு மீது எந்த விசாரணையும் நடைபெறாமல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இவ்வழக்கு பிப்ரவரி 4-ந் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications