லக்கிம்பூர்: விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்தது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கும் பரவியது.
டெல்லி எல்லைகளில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி போராட்ட களத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
லக்கிம்பூர் கொலை.. வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.. ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து
லக்கிம்பூர் படுகொலைகள்
இந்நிலையில் உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த அக்டோபர் 3-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் கூட்டத்தின் மீது சொகுசு கார் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா
இதனால் விவசாயிகள் கொந்தளித்தனர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. 4 விவசாயிகள் உட்பட மொத்தம் 9 பேர் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தனர். நாடு முழுவதும் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும்; மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி
இதனிடையே லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. உச்சநீதிமன்றத்தில் கடந்த 8-ந் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா ஹோக்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது விவசாயிகள் படுகொலை வழக்கில் யார் மீதும் உ.பி. அரசு நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அத்துடன் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
தற்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 10 பேர், விவசாயிகள் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நாளைய விசாரணையின் போது உ.பி. மாநில அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.