இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு- செப்.9-ல் விசாரணை
டெல்லி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் தங்களது எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கைது செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது.
இலங்கையில் புதிய பரபரப்பு- நாளை நாடு திரும்புகிறாராம் தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே
மீனவர் படுகொலை
இதுவரை சுமார் 800 தமிழக மீனவர்கள், நடுக்கடலில் இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுநாள் வரை மத்திய அரசு எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை. இலங்கை கடற்படை மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் குஜராத் மீனவர் ஒருவர் அண்மையில் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட போது கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
கச்சத்தீவு வழக்கு
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவதும் ஒரு வழி என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு, மத்திய அரசால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி இது. ஆகையால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
தொடர் கைதுகள்- முதல்வர் கடிதம்
இருந்த போதும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 5-வது முறையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்பதிக்கிறது. தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.