உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு- உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு- செப்.6-ல் விசாரணை
டெல்லி: மத்திய அரசின் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமாவளவன் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நாட்டில் சமூகம், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதான் சமூக நீதி என்பதால் இந்திய அரசியல் சாசனமும் இதனை உறுதி செய்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காகதான் இந்திய அரசியல் சாசனம் முதன் முதலாக திருத்தப்பட்டது. இந்தத் திருத்தத்துக்காக போராடியது தந்தை பெரியார்தான்.
காலந்தோறும் இந்த இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினர் எனப்படும் முற்பட்ட வகுப்பினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது மண்டல் கமிஷன். இதனை எதிர்த்து உயர்ஜாதி எனப்படுகிற முற்பட்ட வகுப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி தீக்குளித்த கொடுமையும் இந்தியாவில்தான் அரங்கேறியது.

10% இடஒதுக்கீடு கொடுத்த மத்திய அரசு
ஆனால் காலம் மாற உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு கோரினர். இதனடிப்படையில்தான் உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியான பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் வரம்பு மீறல்
பொதுவாக இடஒதுக்கீடு வழக்குகளில் இடஒதுக்கீடு அளவானது 50%-த்தை தாண்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. மத்திய அரசு உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இந்த 50% இடஒதுக்கீடு வரம்பு மீறப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

செப்.13 முதல் விசாரணை
நாட்டின் அரசியல் சாசனத்தில் சமூக- கல்வி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது; ஆனால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தவில்லை என இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டபபட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் செப்டம்பர் 13-ந் தேதி முதல் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு விசாரணையை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து செப்டம்பர் 6-ந் தேதி முடிவு செய்யபப்ட உள்ளது.

திருமாவளவன் வழக்கு
இந்நிலையில் முற்படுத்தப்பட்ட வகுப்பு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வரும் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்வழக்கில் தொல்.திருமாவளவன் சார்பாக மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா ஆஜராக உள்ளார்.












Click it and Unblock the Notifications