வக்பு சொத்து விபரங்களை பதிவு செய்ய கால நீட்டிப்பு கிடையாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. அதையடுத்து மத்திய அரசு வக்ஃபு வாரிய சொத்துகளை பதிவு செய்வதற்காக உமீத் என்கிற இணையதளத்தை தொடங்கியது. டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் வக்பு சொத்து விபரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு கால அவகாசம் கேட்டு பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் கால நீட்டிப்பு செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய 2 அவைகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மசோதாவை கைவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வக்பு வாரிய சொத்து விவரங்களை பதிவு செய்வதற்காக உமீத் (UMEED Portal) என்கிற இணையதளம் தொடங்கப்பட்டது.

வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதற்காக அந்த இணையதளம் தொடங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியிருந்தது. கடந்த ஜூலை மாதம் அந்த இணையதளம் தொடங்கியபோது, அடுத்த 6 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்து விபரங்கள் அதில் பதிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
வக்பு வாரிய சொத்துகள் பதிவு
சொத்துகளின் பதிவு செய்யும்போது அதன் அகலம், நீளம், புவிசார் குறிசொற்கள் விவரங்கள் இடம்பெற வேண்டியது கட்டாயம் என்று கூறியிருந்தனர். உமீத் இணையதளத்தில் பதிவு செய்யாத சொத்துகள் சர்ச்சைக்குரிய சொத்தாக கருதப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி சொத்துக்களை பதிவு செய்வதற்கு வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி வரை நேரமும் வழங்கப்பட்டிருந்தது.
அந்தந்த வக்ஃபு வாரியங்களின் முத்தவல்லிகள் மூலம் சொத்து விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக சிறப்பு முகாம்களும் திறக்கப்பட்டிருந்தன. குறுகிய காலமே இருப்பதால் சொத்து விபரங்களை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி உள்ளிட்ட ஏராளமானோர், வக்பு வாரிய சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய கால அவகசாம் தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அவகாசம் கேட்டு வழக்கு
இந்த மனு நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. குறுகிய காலமே இருப்பதால் அந்த மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள் டிசம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருந்தனர்.
அதன்படி வக்பு சொத்து விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், "வக்பு சொத்து விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்ய முடியாது." என்று கூறியது. "பதிவு செய்வதில் பிரச்சனைகள் இருப்போர், கால அவகாசம் முடிவதற்குள் சம்பந்தப்பட்ட வக்பு வாரிய தீர்ப்பாயங்களை அணுகி தீர்வு பெறலாம்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
"தீர்ப்பாயம் ஒவ்வொரு வழக்காக விசாரித்து தீர்வு கொடுக்கட்டும். இதற்காக வக்பு சட்டத்தை திருத்த முடியாது." என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தங்களின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் வக்பு சொத்து விபரங்களை பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்யும் என்று எதிர்பார்ப்பில் இருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications