இந்தியில் மட்டுமே இருந்த நிகழ்ச்சி நிரல்.. கிழித்து எறிந்த திருச்சி சிவா.. டெல்லியில் நடந்த பரபரப்பு
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி குறித்த நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டுமே இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை திருச்சி சிவா எம்.பி கிழித்தெறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு நடத்த இருக்கிறது. இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரின் முதல்நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், இரண்டாம் நாள் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

முன்னதாக இந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதனிடையே, அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றும், வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.
அதேபோல ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமும் இந்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மறைமுக திட்டங்களை வைத்து இருப்பதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் சாடி வருகிறது. இதனிடையே, புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த கூட்டத்தொடர் கூடும் என எதிர்பார்க்கபப்டும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராஜ்நாத்சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கான நிரல் இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டதற்கு திமுக எம்.பி திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்டு இருந்த நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications