சரியான 420.. அப்டின்னு இனி திட்ட முடியாது! சட்டப் பிரிவை மாற்றும் மத்திய அரசு! ஊரடங்கு 144ம் மாறுதாம்
டெல்லி: நாட்டில் நடைமுறையில் உள்ள ஐபிசி, சிஆர்பிசி, எவிடென்ஸ் சட்டங்களையும், அதன் பெயர்களையும் மாற்றும் மத்திய அரசு மோசடி வழக்குகளில் போடப்படும் 402 போன்றவற்றின் எண்ணையும் மாற்றுகிறது.
குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சான்று சட்டங்களாக உள்ள ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட் போன்றவை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அமலில் உள்ளன. குறிப்பாக 1860 களில் இருந்து ஐபிசி சட்டம் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு சட்டங்கள் காலமாற்றம், சூழலுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு வந்து உள்ளன.

காலனியாதிக்க காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களையும், இந்திய மக்களையும் வெள்ளையர்கள் ஒடுக்க பயன்படுத்தப்பட்டு வந்த சட்டங்களும் இன்னும் அமலில் இருந்து வருகின்றன. தேச துரோகம், UAPA போன்ற அந்த சட்டங்கள் அரசுக்கு எதிராக போராடும் மக்கள், சமூக ஆர்வலர்கள் மீதே போடப்பட்டு தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த சட்டங்கள் மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஐபிசிக்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா, சிஆர்பிசிக்கு பதில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, எவிடன்ஸ் சட்டத்துக்கு பதில் பாரதிய சாக்ஷ்யா என்று அனைத்துக்கும் இந்தியில் பெயர் மாற்றி புதிய சட்டங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதலுக்காக இந்த மூன்று மாற்றங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதில் பல்வேறு குற்றங்களும், தண்டனைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், தேச துரோக சட்டத்தை திரும்பப்பெற முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கு இணையாக ஒற்றுமையை சீர்குலைத்தல் (செக்சன் 150) என்ற புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி வழக்கமாக சாமானிய மக்களே கேட்டு பழகிய சட்ட எண்களில் மாற்றத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு அப்படி மாற்றப்படும் முக்கிய எண்களை பார்ப்போம்.
- 163 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக திருட்டு, மோசடி போன்ற குற்றங்களுக்கு போடப்பட்டு வரும் 420 ஐ 316 என மாற்றுகிறது அரசு. மோசடி செய்பவர்களை 420 என்று மக்கள் திட்டுவது தொடங்கு 420 என்ற எண்ணை வைத்து திரைப்படங்கள், பாடல்களும் வெளி வந்துள்ளன. இவ்வளவு புகழ்பெற்ற நம்பரை 316 என மத்திய அரசு மாற்றுகிறது. இனி மோசடி பேர்வழிகளை போடா 316 என்றுதான் வசைபாட முடியும்.
- அதேபோல் கொலை குற்றங்களுக்கு போடப்படும் 302 சட்டத்தை எண்ணை 101 என்று மத்திய அரசு மாற்றி இருக்கிறது.
- ஊரடங்கு உத்தரவுக்கு பிறப்பிக்கப்படும் 144 என்ற எண்ணையும் 187 என மாற்ற உள்ளார்கள். இனி 187 ஊரடங்கு உத்தரவு என்றுதான் சொல்ல முடியும்.












Click it and Unblock the Notifications