பஹல்காம் தாக்குதல்.. தீவிரவாதிகள் கையில் ‘அந்த’ பொருள்! சுற்றிவளைத்த ராணுவம்..ஆனாலும் தொடரும் சிக்கல்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் நான்கு முறை சுற்றி வளைத்ததாகவும், ஆனால் அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் தொடர்ந்து தப்பி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து இரண்டு செல்போன்களை அவர்கள் பறித்து சென்றதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இந்திய எல்லையை அவர்களால் தாண்ட முடியாது என உறுதியாக கூறி இருக்கிறது பாதுகாப்பு படை.
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடூர மரணத்தை சந்தித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தீவிரவாதிகளை நான்கு முறை இந்திய ராணுவம் சுற்றி வளைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பாதுகாப்பு படையினர் அந்த தீவிரவாதிகளை நான்கு முறை வெவ்வேறு இடங்களில் சுற்றி வளைத்துள்ளனர். ஒருமுறை தெற்கு காஸ்மீரின் காட்டுப்பகுதியில் அவர்களை முற்றுகையிடும் அளவுக்கு நெருங்கியபோது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் மக்கள் நுண்ணறிவு தகவல்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளின் மூலம் இந்த தீவிரவாதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அடர்ந்த காடுகளுக்குள் அவர்கள் மறைந்திருக்கும் நிலையில் சில தருணங்களில் தீவிரவாதிகள் தெளிவாக தென்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது, காடுகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும் நிலையில் ஓரிடத்தில் அவர்களை கண்டுபிடித்தாலும் அவர்கள் தொடர்ந்து ஓடி ஒளிந்து வருகின்றனர். ஆனால் சில நாட்களுக்குள் தீவிரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என பாதுகாப்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் இந்தியாவின் ராணுவம், மத்திய ஆயுதப்படையினர், ஜம்மு காஷ்மீர் போலீசார் தற்போது காடுகளில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறும் போது," தீவிரவாதிகள் முதலில் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள அபுத் நார் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டனையில் அவர்கள் காட்டில் அடர்ந்த சூழலை பயன்படுத்தி தப்பியுள்ளனர். பிறகு குல்காம் காட்டுப்பகுதியில் மீண்டும் காணப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி உள்ளனர். மீண்டும் அந்த தீவிரவாதிகள் திறல் மற்றும் குக்கர்நாக் பகுதிகளில் பதுங்கி இருந்த நிலையில் தற்போது அவர்கள் அங்கிருந்தும் தப்பி உள்ளனர்.
தீவிரவாதிகள் உணவு தேவைக்காக மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் உணவு பெறுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் உணவுப் பொருட்களை திருடி சென்றதாகவும் தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த தகவல்கள் மூலம் அவர்களை சுற்றி வளைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் மிக கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் கிஸ்த்வார் பகுதியில் இருந்து அவர்கள் ஜம்முவை நோக்கி செல்லும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது அவர்கள் தெற்கு காஷ்மீரில் இருப்பதாக நம்பப்படுகிறது. தீவிரவாதிகள் செய்யும் ஒரு மிகச் சிறிய தவறு கூட அவர்களுக்கு முடிவாக இருக்கும்.
உதாரணத்திற்கு பைசரானில் கொல்லப்பட்ட சுற்றுலா பயணிகளின் இரண்டு மொபைல் ஃபோன்களை அவர்கள் திருடி சென்றிருக்கிறார்கள். இவை உள்ளூர் மக்களுடனும் மற்றும் எல்லையில் இருக்கும் நபர்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்ற அடிப்படையில் தற்போது அந்த போனை ட்ராக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதிகள் பலத்த பாதுகாப்புடன் மூடப்பட்டு இருக்கும் நிலையில், தீவிரவாதிகள் நிச்சயம் எல்லையை கடக்க முடியாது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications