2 டோஸ் போட்டதோடு.. இனி பூஸ்டரும் போட வேண்டுமா? சீரம் நிறுவனம் முடிவு.. யாருக்கெல்லாம் தேவை?
டெல்லி: இந்தியாவில் 2 டோஸ் கொரோனா வேக்சினுக்கு மேலாக கூடுதலாக ஒரு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்கு சீரம் நிறுவனம் விண்ணப்பம் வைத்துள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா அச்சம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கூட வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு ஜீன் சோதனையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா அமெரிக்கா, ஜப்பான் உட்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பூஸ்டர்
ஓமிக்ரான் கொரோனாவில் 50 உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்பைக் புரோட்டினில் மட்டும் 32 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஓமிக்ரான் கொரோனா வேக்சின்களுக்கு எதிரான ஆற்றல் கொண்டு இருக்கும். உடலில் இருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்திக்கு எதிராக இருக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் பல நாடுகள் 2 டோஸ் கொரோனா வேக்சினுக்கும் மேலாக கூடுதலாக பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தில் இருக்கிறது.

பூஸ்டர்
பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் 2 டோஸ் கோவிஷீல்ட் வேக்சினுக்கு மேலாக கூடுதலாக ஒரு கோவிஷீல்ட் பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்கு சீரம் நிறுவனம் விண்ணப்பம் வைத்துள்ளது.புதிய வகை ஓமிக்ரான் கொரோனா பரவும் நிலையில் இந்த விண்ணப்பத்தை சீரம் நிறுவனம் செய்துள்ளது.

சீரம் நிறுவனம்
சீரம் நிறுவனத்தின் ஒப்புதல் விவகாரத்துறை இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் இந்த விண்ணப்பத்தை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் பரவலால் பூஸ்டரின் தேவை அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கோவிஷீல்ட் போட்டுக்கொண்ட மக்கள் தற்போது பூஸ்டர் டோஸ்களை போட தொடங்கி உள்ளனர்.

கூடுதல் டோஸ் உள்ளது
நாங்கள் பயன்படுத்தும் ஆஸ்டர்செனகா வேக்சினுக்கு ஏற்கனவே யு.கேவில் பூஸ்டர் டோஸ் கொடுக்கும் அனுமதியை அந்நாட்டு மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கவிட்டது. இந்தியாவில் கோவிஷீல்ட் தேவையான கையிருப்பில் உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் பூஸ்டர் டோஸ் கொண்டு வருவது சிறப்பாக இருக்கும். ஓமிக்ரான் பரவலுக்கு இடையே பூஸ்டர் டோஸுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா பரவல்
ஏற்கனவே இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டவர்களில் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் பூஸ்டர் டோஸ் போட அனுமதிக்க வேண்டும். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் பூஸ்டர் டோஸ் அனுமதியை உடனே வழங்கிட வேண்டும். இது மக்களை மேலும் பாதுகாக்க உதவும், என்று சீரம் நிறுவனம் இதில் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ்கள் போட்டும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள், மருத்துவமனையில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், வயது அதிகம் கொண்டவர்கள், கிட்னி, கல்லீரல், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் ஆகியோருக்கு பொதுவாக பூஸ்டர் டோஸ்கள் போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications