கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, சப்ளையில் இணைந்து செயல்படுவோம்.. சீரம், பாரத் பயோடெக் கூட்டாக அறிவிப்பு
டெல்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்க, மற்றும் வழங்குவதற்கு, இந்தியாவிலும் உலக அளவிலும் இணைந்து செயல்படும் என்று கூட்டாக அறிவித்துள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களின் சார்பாக சீரம் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா மற்றும் பாரத் பயோடெக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா ஆகியோர் ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் உலக அளவிலும் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதே நமக்கு முன்னால் உள்ள மிக முக்கியமான பணி என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை டி.சி.ஜி.ஐ ஞாயிற்றுக்கிழமை வழங்கியது. இந்த நிலையில், இரு நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்திற்கானவை. மேலும் அவை உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு விரைவாக திருப்பி கொண்டுவரவும் சக்தி கொண்டவை. இப்போது இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் EUA (அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம்) பெற்றுள்ளன. இவை இணைந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளன. தேவைப்படும் மக்களுக்கு அதிக தரம் வாய்ந்த, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை வழங்குவோம், " என்று அதில் கூறியுள்ளனர்.
"எங்கள் இரு நிறுவனங்களும் இந்தச் செயலில் முழுமையாக ஈடுபட்டுள்ளன, மேலும் தடுப்பூசிகளை சீராக வெளியிடுவதை உறுதிசெய்வது நாட்டுக்கும், உலகத்துக்கும் நமது கடமையாக கருதுகிறோம். எங்கள் ஒவ்வொரு நிறுவனமும் திட்டமிட்டபடி தங்கள் கோவிட் -19 தடுப்பூசிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்கின்றன," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
இரு தடுப்பூசி நிறுவனங்களில் கோவேக்சின் தடுப்பூசி இன்னமும் சரியான டேட்டாக்களை வழங்கவில்லை என்றும், அதற்குள்ளாக அரசு இப்படி அனுமதி வழங்கிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் பலவும் குற்றம்சாட்டின. ஆனால், இப்போது இரு நிறுவனங்களும் இணைந்து மக்களுக்கு தடுப்பூசிகள் கொண்டு சேர பாடுபடப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications