எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்பட்ட விருதை பயன்படுத்த டிஎம் கிருஷ்ணாவுக்கு தடை- உச்சநீதிமன்றம்
டெல்லி: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்தும்.. நீதிமன்ற தீர்ப்புக்கு என்ன காரணம் என்பது குறித்தும் நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் கடந்த 2005ம் ஆண்டு முதல் மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருதை வழங்கி வருகிறது. இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

வழக்கு: விருது அறிவிக்கப்பட்ட போதே பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இதற்கு எதிராகக் கருத்து கூறினர். இந்தச் சூழலில் தனது பாட்டி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். முதலில் இந்த மனுவை விசாரித்த ஒற்றை நீதிபதி அமர்வு விருது வழங்கத் தடை விதித்து உத்தரவிட்டது.
மியூசிக் அகாடமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அதை விசாரித்தது. விருது வழங்க அனுமதித்து இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இந்தச் சூழலில் தான் டி எம் கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அவரது பேரன் வி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
பின்னணி: கடந்த வாரம் வியாழக்கிழமை அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கும் விழா நடந்த நிலையில், மேல்முறையீட்டு விழாவை அவசர மனுவாக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. விருது வழங்கப்பட்டாலும் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவில் டி எம் கிருஷ்ணாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் இடைக்கால உத்தரவு: இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கை நாங்கள் விசாரித்து முடிக்கும் வரை, அந்த விருதை டி எம் கிருஷ்ணா பெற்றதாக அங்கீகரிக்கக்கூடாது" என்றனர். அதேநேரம் தங்களின் இந்த உத்தரவு டிஎம் கிருஷ்ணாவின் இசை திறனைக் குறைத்து மதிப்பிடும் வகையிலோ அல்லது விருது வழங்கியவர்களின் முடிவைக் கேள்வி கேட்பதாகவோ கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
டி.எம். கிருஷ்ணா அந்த கட்டுரையைப் பாடகர் எம்எஸ் சுப்புலட்சுமிக்கு மரியாதையைச் செலுத்தும் வகையிலேயே எழுதியுள்ளார் என்ற போதிலும், அதில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நன்றாக இல்லை என்றும் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்தே இந்த விவகாரத்தில் டி. எம், கிருஷ்ணாவும், மியூசிக் அகாடமியும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications