அதானி விவகாரம்.. என்ன இப்படி சொல்லிட்டாரு.. சரத் பவார் பேச்சால் திகைத்த எதிர்க்கட்சிகள்..என்னாச்சு
டெல்லி: அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், ஜேபிசி விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சரத் பவார் பேசியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு திகைப்பை கொடுத்துள்ளது.
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அதிக அளவில் கடன் பெற்று இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை எப்போது கை காட்டும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து கொண்டு மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டது.
இதனால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டு வந்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், அதானி விவகாரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் ஒரே குரலில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது ஒற்றுமையை காட்டும் விதமாக இருந்தது. இந்த நிலையில், பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், அதானிக்கு ஆதரவாக பேசியது எதிர்க்கட்சிகளுக்கு வியப்பை அளித்துள்ளது.

இது தொடர்பாக சரத் பவார் கூறும் போது, "இதுபோன்ற அறிக்கைகள் இதற்கு முன்பாகவும் சில தனிநபர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் சில நாட்கள் கடும் அமளி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்திற்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விட்டது. குறிவைக்கப்பட்ட விஷயம் போலவே தெரிகிறது" என்று கூறினார். சரத் பவாரின் இந்த பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு வியப்பை கொடுப்பதாக அமைந்துள்ளது. சரத்பவார் வெளிப்படையாகவே அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மாறாக பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. சரத் பவாரின் இந்த பேச்சு தொடர்பாக கருத்து எதையும் கூற எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன.












Click it and Unblock the Notifications