திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவ காரணமே பிரசாந்த் கிஷோர், யஷ்வந்த் சின்ஹாதான்- சத்ருகன் சின்ஹா ஓபன் டாக்
டெல்லி: காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் தாம் இணைய காரணம் தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் மற்றும் யஷ்வந்த் சின்ஹாதான் என சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் அசன்சால் லோக்சபா தொகுதி, பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 24-ந் தேதி நிறைவடைகிறது. அசன்லால் தொகுதி வேட்பாளராக நடிகர் சத்ருகன் சின்ஹாவும் பாலிகங்கே தொகுதிக்கு பாபுல் சுப்ரியோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சத்ருகன் சின்ஹா கூறியிருப்பதாவது: அசன்லால் தொகுதி வேட்பாளராக மமதா பானர்ஜி என்னை அறிவித்தது மிகப் பெரிய கவுரவமாகும். நான் திரிணாமுல் காங்கிரஸில் இணைவதற்கு என்னுடைய மூத்த சகோதரர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் பிரசாந்த் கிஷோர் இருவரும்தான் காரணம். பிரசாந்த் கிஷோர் என்னுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். அவர்தான் நான் திரிணாமுல் காங்கிரஸில் இணைய வேண்டும் என விரும்பினார்.
மமதா பானர்ஜி நாட்டின் மிகப் பெரிய தலைவர். அவர் பிரதமர் வேட்பாளராவதற்கு பொருத்தமானவர். நாட்டின் பிரதமராக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் இருக்கும் போது மேற்கு வங்கத்தை சேர்ந்த மமதா ஏன் பிரதமராக கூடாது? தற்போதைய நிலையில் காங்கிரஸ் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. நேரு முதல் இந்திரா, சோனியா காந்தி என காங்கிரஸ் தலைவர்கள் மீது எப்போதும் மதிப்பு உண்டு. ராகுல் காந்தியுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
நான் அனைத்து இந்தியர்களுக்குமான நபர். பீகாரி என முத்திரை குத்துவது சரி அல்ல. குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி உ.பி.யின் வாரணாசி தொகுதியில் போட்டியிடவில்லையா? இத்தனைக்கும் பிரதமர் மோடிக்கு வாரணாசி மக்கள் பேசும் மொழி தெரியாது. எனக்கு வங்க மொழி தெரியும். அதனால் அசன்லால் தொகுதியில் போட்டியிடுவது தவறு எதுவும் இல்லை. இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.












Click it and Unblock the Notifications