கட்டிய சேலையோடு நாட்டை விட்டு இந்தியாவுக்கு ஓடிவந்த ஷேக் ஹசீனா.. மாற்று உடைகள் கொடுத்த அதிகாரிகள்!
டெல்லி: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்டிய சேலையுடன் அந்த நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷேக் ஹசீனா மாற்று உடைகளைக் கூட எடுத்து வர அந்நாட்டு ராணுவம் அவகாசம் தராமல் விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது. வன்முறை கும்பல் தங்களது மாளிகைக்குள் நுழைந்ததால் வேறுவழியே இல்லாமல் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் வங்கதேசத்தை விட்டு தப்பி இந்தியாவுக்கு உள்ளது பரிதாபகரமானது.
வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. அவரது 16 ஆண்டு கால ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. அத்துடன் இந்தியாவுடன் மிக நெருக்கமாக, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாடாக வங்கதேசம் மாற்றப்பட்டுவிட்டது என்பதும் குற்றச்சாட்டு.

இதனால் இந்திய எதிர்ப்பு, வங்கதேச விடுதலைக்குப் போராடியவர்களுக்கான இடஒதுக்கீடு எதிர்ப்பு என அடுத்தடுத்து மாணவர்கள் மூலமாக போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்தப் போராட்டங்களில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்தப் போராட்டம் அதி உச்சமடைந்த நிலையில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் மாளிகையையும் ஆயிரக்கணக்கான வன்முறையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் ஷேக் ஹசீனாவை பதவி விலக வேண்டும் என ராணுவம் நெருக்கடி கொடுத்தது. அதுவும் 45 நிமிடத்தில் பதவியை ராஜினாமா செய்ய காலக்கெடுவும் விதித்தது அந்நாட்டு ராணுவம்.
இதனால் வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு வங்கதேசத்தை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது மத்திய அரசின் பாதுகாப்பில் டெல்லியில் ரகசிய இடம் ஒன்றில் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் அடைக்கலம் தர எந்த நாடும் உடனே முன்வராத நிலையில் அவருக்கு இந்தியா சற்று கால அவகாசம் வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, கட்டிய சேலையுடன் மட்டுமே அந்த நாட்டை விட்டு தப்பி ஓடி வந்தார் என்கின்றன சில செய்திகள். மாற்று உடைகள் மற்றும் அத்தியாவசியமான உடைமைகள் எதனையும் எடுத்துச் செல்லக் கூட ராணுவம் கால அவகாசம் தராததால் உடுத்திய உடையுடன் அந்த நாட்டை விட்டு தப்பி இந்தியாவுக்கு ஷேக் ஹசீனா ஓடி வந்திருக்கிறாராம்.
இதனையடுத்து இந்திய அதிகாரிகள்தான் தேவையான உடைகள் மற்றும் உடைமைகளை ஏற்பாடு செய்து தந்தனராம். தமக்கு எதிரான புரட்சியால் நாட்டை விட்டு ஓடி வந்த அதிர்ச்சியில் இருந்து ஷேக் ஹசீனாவால் மீள முடியாத நிலை இருக்கிறதாம். ஷேக் ஹசீனா குடும்பத்தில் அவர் மட்டுமே வங்கதேசத்தில் இருந்தார்; அவரது குடும்பத்தினர் இப்போதும் வெளிநாட்டில்தான் உள்ளனர். ஷேக் ஹசீனாவின் சகோதரி மகள் இங்கிலாந்து எம்பியாக இருக்கிறார்; ஆனாலும் இங்கிலாந்து ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications