அமெரிக்காவே காரணம்.. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சொன்னாரா? பாய்ந்து வந்து மறுத்த மகன்!
டெல்லி: செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுக்காததால் தான் தாம் வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாக செய்தி ஊடகங்களில் வெளியான அறிக்கை பொய்யானது என்றும், இதுவரை ஷேக் ஹசீனா எந்த அறிக்கையும் அளிக்கவில்லை என்றும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் ஜாய் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், எதிர்க்கட்சியுடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியது அரசையே அதிர வைத்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு ஆட்சி அமைத்துள்ளது.

தொடரும் வன்முறை: ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினாலும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரை குறிவைத்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவாமி லீக் கட்சியினர் பலர் சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவ, புத்த மதத்தினரைக் குறிவைத்து பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹசீனா கடிதம்?: இந்த நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது டாக்கா இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, நாட்டுக்காக உரையாற்ற விரும்பியதாகவும், ஆனல் வன்முறை காரணமாக எதிர்ப்பாளர்கள் அவரது வீட்டு வாசலை அடைந்ததால், நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சீக்கிரம் வெளியேறுமாறு அறிவுறுத்தியதாலும் தன்னால் உரை நிகழ்த்த முடியவில்லை எனத் தெரிவித்து, தனது நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.
ஷேக் ஹசீனா ஆட்சியே வங்கதேசத்தின் பொற்காலம் என இதே மக்கள் விரைவில் சொல்வார்கள்.. மகன் பேட்டி!
வன்முறையால் பலியாகும் உடல்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே நான் என் பதவியை ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினார்கள். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. ஒருவேளை, நான் நாட்டில் தங்கியிருந்தால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததால் தான், நான் உங்கள் தலைவராக ஆனேன். நீங்கள் என் பலம். அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன். வங்கதேச மக்களே என்னை விரும்பாததால் தான் நான் வெளியேறினேன் என ஷேக் ஹசீனா அந்த கடித்ததில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
அமெரிக்கா காரணம்: மேலும், வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு மற்றும் வங்கக்கடல் பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், தம்மால் ஆட்சியை தொடர்ந்து நடத்திருக்க முடியும் ஆனால் தான் அதை விரும்பவில்லை என்றும் மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்றும் பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்றும் வங்கதேசமுன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அறிவுறுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஷேக் ஹசீனாவின் மகன் மறுப்பு: இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “சமீபத்தில் எனது தாயார் பதவில் விலகியது தொடர்பாக அவரது ஸ்டேட்மெண்ட் எனக் கூறி நாளிதழில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் புனையப்பட்டது. டாக்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை நான் அவரிடமே உறுதிப்படுத்தினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications