ஷின்சோ அபேவை கொன்றது ஜப்பானின் அக்னிபாத் வீரர்! பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்
டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற நபர் அந்நாட்டின் அக்னிபாத் போன்ற திட்டத்தால் பாதிக்கப்பட்டவர் என காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறியுள்ளார்.
Recommended Video
ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். கடந்த 2020ல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டின் நாரா பகுதியில் சாலையில் நின்று ஷின்சோ அபே மக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தார்.

ஷின்சோ அபே படுகொலை
அப்போது அவருக்கு பின்னால் வந்த நபர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு காயமடைந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

முன்னாள் வீரர் கைது
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதற்கிடையே ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்ற நபரான டெட்சுயா யமகாமி (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஜப்பானிய கடற்படையின் தற்காப்பு படையின் வீரராக பணியாற்றி இருந்தது தெரியவந்துள்ளது. இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் எம்பி கருத்து
இந்நிலையில் தான் ஷின்சோ அபேவின் படுகொலை குறித்து காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி பிரமோத் திவாரி பேசியுள்ளார். இவர் அக்னிபாத் திட்டத்தையும், ஷின்சோ அபேவின் படுகொலையும் ஒன்றாக இணைத்து கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் எம்பி பிரமோத் திவாரி கூறியதாவது: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

அக்னிபாத் திட்டத்துடன் ஒப்பீடு
இது அக்னிபாத் போன்ற திட்டத்தின் பாதகமான முடிவாக தான் உள்ளது. கொலை செய்த நபர் கடற்படையில் 3 ஆண்டு பணி செய்த பிறகு வேலையின்றி தவித்துள்ளார். இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஆவணப்படங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு பாஜக தான் காரணமாக உள்ளது. நாட்டில் உள்ள பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை மடைமாற்றவே இதுபோன்ற விஷயங்களை பாஜக கையில் எடுக்கிறது.

மம்தா கட்சி பத்திரிகையும் ஒப்பீடு
முன்னதாக, ஷின்சோ அபேவின் படுகொலையையும் அக்னிபாத் திட்டத்தையும் சேர்த்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‛ஜாகோ பங்களா' முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்து இருந்தது. ஷின்சோ அபேவின் படுகொலை தொடர்பான செய்தியை ‛ஷின்சோஅபேவின் கொலையில் அக்னிபாத் நிழல்' என்ற தலைப்பில் ஜப்பானின் கடற்படையின் தற்காப்பு படையில் 3 ஆண்டு பணிபுரிந்து ஓய்வூதியம் பெறாத ஊழியர் ஷின்சோ அபேவை கொலை செய்துள்ளார் என்பன போன்ற விபரங்களுடன் செய்தி வெளியிட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications