முதலில் கோவிஷீல்டு.. 2வது டோஸ் கோவாக்சின்.. மாற்றி போட்டால் என்னவாகும்? மத்திய அரசு முக்கிய விளக்கம்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களுக்கு 2 டோஸ்களில் இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக எவ்வித மோசமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசம் உள்ளது. ஒரு புறமும் கொரோனாவாலும், மறுபுறம் சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமலும் பொதுமக்கள் அதிகளவில் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இம்மாத தொடக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள கங்கை நதியில் மிதந்து வந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

பெரும் குழப்பம்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு பெரும் குழப்பம் அரங்கேறியது. அதாவது உத்தரப் பிரதேசத்திலுள்ள சித்தா நகர் என்ற நகரிலுள்ள கிராமத்தில் பொதுமக்களுக்கு 2 டோஸ்களில் இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது. அங்குள்ள சுமார் 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு அளிக்கப்பட்ட நிலையில், 2ஆவது டோஸாக கோவாக்சின் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிப்பு ஏற்படாது
இதன் காரணமாக அந்த 20 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்திருந்தது. இந்நிலையில், இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறுகையில்,"இது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இது குறித்துக் கூடுதல் புரிதலுக்கு நாம் சற்று காத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் அளிப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. இருப்பினும் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை
தடுப்பூசியை இப்படி மாற்றி அளிக்குமாறு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்த மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் சவுத்ரி, இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த வாரம் மகாராஷ்டிராவிலும் 72 வயது முதியவருக்கு முதல் டோஸில் கோவாக்சின், 2ஆவது டோஸில் கோவிஷீல்டு அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்வதேச ஆய்வு
தடுப்பூசிகளை இப்படி மிக்ஸ் செய்து அளிப்பதால் தடுப்பாற்றல் அதிகரிக்கிறதா என்பது குறித்த சோதனைகளை உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசி அளிப்பது குறித்து தி லான்செட்டில் ஆய்வு இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்பவர்களுக்குக் குறுகிய கால பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு லாபம்
இருப்பினும், அவை தடுப்பாற்றலை எந்தளவு அதிகரிக்கிறது என்பது குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசிகளை அளிக்கும்போது தடுப்பாற்றல் அதிகமாவது தெரியவந்தால், அது இந்தியாவுக்கு பெரும் பலனைத் தரும். நாட்டில் தற்போது தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க இது உதவும்.












Click it and Unblock the Notifications