ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவும்... ஐ.சி.எம்.ஆர். தகவல்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒரு நோயாளி சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்தால் அவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை முழு வீச்சில் செயலாற்றி வருகிறது. சமூக விலகலை கடைபிடிப்பதன் மூலம் நோய் தொற்று குறைய வாய்ப்புள்ளதால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆகச்சிறந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் குறைந்தபாடில்லை.
இதுவரை நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய 136 அரசு பரிசோதனை நிலையங்களும் 59 தனியார் பரிசோதனை நிலையங்களும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ சி எம்.ஆர் தலைவர் கங்கேத்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஹைட்ராக்ஸி குளோராகுயின் மாத்திரையை பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சில நோயாளிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதாகவும், அதுவும் நோயின் தீவிரத்தன்மையை அறிந்து அதற்கேற்றது போல் இந்த மாத்திரைகள் கொடுக்கப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரோனா தொற்றின் விகிதத்தை ஒரு நோயாளி மூலம் இருவர் என்ற அளவிற்கு வெகுவாக குறைக்க முடியும் என லாவ் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அதே வேளையில் கொரோனா தொற்றுள்ள ஒரு நோயாளி சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனில் அவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு அது பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.