SIR: கர்நாடகா - தெலுங்கானா உள்பட 22 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் - அறிவித்த தேர்தல் ஆணையம்
டெல்லி: நம் நாட்டில் முதற்கட்டமாக SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து அடுத்தக்கட்டமாக கர்நாடகா, தெலுங்கானா உள்பட மீதமுள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் மாதம் SIR பணிகள் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛வாக்காளர் பட்டியல்களை புதுப்பிப்பதற்கும், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மையை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து முடிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் , ஜார்க்கண்ட், கர்நாடகா, லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்க உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டது.
அதன்படி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது 22 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications