சிபிஎம் பொதுசெயலாளராக மீண்டும் சீதாராம் யெச்சூரி தேர்வு.. 3வது முறையாக பொறுப்பேற்பு!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளராக சீதாராம் யெச்சூரி தொடர்ந்து 3வது முறையாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் கேரளா கண்ணூரில் உள்ள சிஎச் கணாரன் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு நடக்கிறது.
இந்நிலையில் இன்றைய மாநாட்டின்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சீதாராம் யெச்சூரி கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 2 முறை கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்ட சீதாராம் யெச்சூரி தற்போது தொடர்ச்சியாக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள், மத்திய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலைமை குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: சீதாராம் யெச்சூரி(பொதுச்செயலாளர்), பிரகாஷ் காரத், பினராயி விஜயன், கொடியேரி பாலகிருஷ்ணன், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், முகமது சலீம், பி.வி.ராகவலு, சூர்ய காந்த் மிஸ்ரா, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்ஏ பேபி, ஜி ராமகிருஷ்ணன், சுபாஷினி அலி, ராமச்சந்திர தோம், அசோக் தவாலே, ஏ.விஜயராகவன் ஆகியோர் உள்ளனர்.
இந்த மாநாட்டில் நேற்று சிறப்பு விருந்தினராக முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார். என்ட பெயர் ஸ்டலாின் என மலையாள மொழியில் பேசி அசத்தினார். இந்த மாநாட்டின்போது மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் பேசினார். மாநில அரசுகளை மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் மாநில அரசுகளின் உரிமைகளை ஒருபோதும் மத்திய அரசிடம் விட்டு தரமாட்டோம் என ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications