ராகுல் காந்தி மாறிவிட்டார்.. இனியும் விளையாட்டாக நினைக்கக்கூடாது.. ஸ்மிருதி இரானி சொன்னது என்ன?
டெல்லி: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாராட்டும் வகையில் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த ஸ்மிருதி இரானி, திடீரென ராகுல் காந்தி பற்றி வியந்து பேசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பியும், பாஜக முன்னணி தலைவருமான ஸ்மிருதி இரானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டிப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ராகுல் காந்தியின் அரசியல் மாறிவிட்டது என்று ஸ்மிருதி கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு பத்திரிகையாளரின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசியுள்ளார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவரிடம் கேட்ட போது, ராகுல் காந்தியின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்மிருதி இரானி பேசுகையில், "நாடாளுமன்றத்தில் டி-சர்ட் அணிந்திருக்கிறார், அந்த வெள்ளை டி-ஷர்ட் மூலம் இளம் தலைமுறையினருக்கு என்ன செய்தி கொடுக்கப் போகிறார் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும். எனவே ராகுலின் செயல்பாடுகள் நல்லதா கெட்டதா என்பதை விடுங்கள். அவர் வேறு விதமான அரசியல் செய்கிறார் என்பது உண்மை.
மிஸ் இந்தியாவிற்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவருக்குத் தெரியும், ஆனால் அவர் இன்னும் சமூக ஊடகங்களில் இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறார். ஏனெனில் அது தலைப்புச் செய்தியாகிறது. மக்கள் பார்வையில் இருக்க இதுபோன்ற அரசியலை ராகுல் முன்னெடுத்திருக்கிறார். வெற்றியை தான் சுவைத்து விட்டதாக நம்புகிறார்" எனக் கூறி இருக்கிறார் ஸ்மிருதி இரானி.
முன்னாள் எம்.பி ஸ்மிருதி இரானி 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தார். அதன் பிறகு அவர் அடிக்கடி ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி குடும்பத்தினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த தோல்விக்கு பழிவாங்கியது.
ராகுல் காந்தி, ரேபரேலி லோக்சபா தொகுதிக்கு மாறிய நிலையில், அமேதி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா களமிறக்கப்பட்டார். ஸ்மிருதி இரானி சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார். ஸ்மிருதி இரானி அமேதியில் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஸ்மிருது இரானியை கடுமையாக தாக்கிப் பதிவிடுவதை ராகுல் காந்தி கண்டித்திருந்தார். ஸ்மிருதி இரானியின் பெயரைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒருவரை வறுத்தெடுப்பது தவறானது என்றும், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்றும், ஒருவரை அவமதிப்பது வலிமை அல்ல, பலவீனத்தின் அடையாளம் என்றும் கூறினார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications