ஒன்பதுமே “ஆட்டம் பாம்”.. மோடிக்கு சோனியா பரபர கடிதம்! நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பாயிண்டுகள்
டெல்லி: மத்திய அரசு திடீரென சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் என்ன குறிப்பிட்டு உள்ளார்? விரிவாக காண்போம்.
கடந்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், திடீரென மத்திய அரசு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றுவது தொடர்பாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாகவும் மசோசாதா தாக்கல் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, செப்டம்பர் 18 - 22 தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நோக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் வினவியுள்ளார். இது குறித்து இன்று அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் 9 பிரச்சினைகளை பட்டியலிட்டு, அவற்றை விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "செப்டம்பர் 18 முதல் ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நீங்கள் கூட்ட உள்ளீர்கள். வேறு எந்த அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்களுக்கு அதன் நோக்கம் பற்றி எந்த யோசனையும் இல்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன் சிறப்பு அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய 9 முக்கிய விசயங்களை பட்டியலிட்ட சோனியா காந்தி, "இவை குறித்து விவாதிக்க சட்ட விதிகளின் படி நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என கூறி உள்ளார்.
9 விவகாரங்கள்:
1. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு. வேலைவாய்ப்பு குறைவு, அதிகரிக்கும் சமத்துவமின்மை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSMEs) துயரம் ஆகியவற்றுடன் தற்போதைய பொருளாதார நிலைமை.
2. அரசாங்கம் விவசாயிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற கோரிக்கைகள் தொடர்பாக அளித்த உறுதிமொழி.
3. அதானி குழுமத்தின் பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை.
4. மணிப்பூர் மக்களின் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் வேதனை, அம்மாநிலத்தில் சிதைந்து உள்ள அரசியலமைப்பு இயந்திரம் மற்றும் சமூக மோதல்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
5. அரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் மத ரீதியிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.
6. இந்திய நிலப்பகுதியை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவது லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் நமது இறையான்மைக்கு சவாலாக உள்ளது.
7. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசர தேவையாக உள்ளது.
8. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்.
9. சில மாநிலங்களில் ஏற்பட்ட தீவிர வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றால் ஏற்படும் இயற்கை பேரிடர்களின் தாக்கம் குறித்து விவாதிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications